Wednesday, July 22, 2020

நர நாராயண ரிஷி

நரன் என்பது மனிதத் தன்மையையும். நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது. நர நாராயணன் என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். தசாவதாரத்தைத் தவிர, பகவான் விஷ்ணு எடுத்த அம்ஸாவதாரங்கள் பற்றியும் நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன. 

விஷ்ணு புராணத்திலும் சிவபுராணத்திலும், வாமன புராணத்திலும், ராமாயண மகாபாரத காவியத்திலும் இந்த நரநாராயண அவதாரத்தின் பெருமை விளக்கப்படுகிறது. சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவன் தனது மார்பிலிருந்து தர்ம தேவனை சிருஷ்டித்தான். தர்மங்களையும் நியாயங்களையும் காப்பாற்றும் பொறுப்பு அந்தத் தேவனுக்குத் தரப்பட்டது. தர்மதேவன் தட்சப்பிரஜாபதியின் பத்து புத்திரிகளை மணந்து, அற்புதமான புதல்வர்களைப் பெற்றான். அவர்களில் ஹரி, கிருஷ்ணா, நரன், நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஹரியும் கிருஷ்ணனும் பிரம்மஞானம் பெற்ற யோகிகளாகி, உலகம் உய்ய தவம் இயற்றலாயினர். 

பிறகு மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது அது நர நாராயணர்களை சிவபெருமானோடு இணைத்த சம்பவம். சிவபெருமானை ஒதுக்கிவைத்துவிட்டு தட்சன் பெரும் யாகத்தைத் தொடங்கினான். சிவபெருமானின் பத்தினியும், தட்சனின் மகளுமான தாட்சாயினி அந்த யாகத்திற்கு சென்று, தன் தந்தை செய்யும் தவறை சுட்டிக்காட்டி வாதிட்டாள். கோபமடைந்த தட்சன், மகளென்றும் பாராமல் அவளை நிந்தித்தான். தாட்சாயினி தட்ச யாகம் அழியட்டும் என்று சாபமிட்டு, யாகசாலையில் பிராணத் தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரர் வடிவில் தோன்றி யாக சாலையை அழித்தார். அப்போது அவர் கையிலிருந்து புறப்பட்ட திரிசூலம் தீயைக் கக்கிக்கொண்டு விண்ணில் கிளம்பியது. நேராக அது பத்ரிகாஸ்ரமம் அடைந்து. அங்கே ஆழ்ந்த தவத்திலிருந்த நாராயணர் மார்பில் தாக்கியது. ஆனால், நர நாராயணர்களைச் சுற்றியிருந்த தவ மண்டலத்தின் சக்தியால் திரிசூலம் திசை திரும்பி சிவபெருமானையே தாக்கியது. அப்போது சிவபெருமான் தலை முடிக்கற்றை திரிசூலத்தின் வெப்பத்தால் கருகியது. அதனால் அது காய்ந்த வைக்கோல் போல ஆனது. இதனால் சிவனுக்கு முஞ்சகேசன் என்ற பெயர் ஏற்பட்டது. முஞ்ச என்றால் காய்ந்த புல் என்று பொருள். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாக இருக்கும்படி வேண்டினர். அப்போது சிவபெருமான், நர நாராயணர்களின் தலவலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே நான் இந்தத் திருவிளையாடல் புரிந்தேன். நர நாராயணர்களின் தவம் என்னைச் சாந்தப் படுத்திவிட்டது. பத்ரிகாஸ்ரமம் அருகிலேயே நானும் அமர்ந்து, என் பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன். 

நாராயணரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் என்னிடமே யுத்தம் புரிந்தாலும் என்னைவிட மேன்மையானவனாக இருப்பாய் என்ற வரத்தை அளிக்கிறார். இதனால் தட்சனின் யாகத்தை அழித்துவிட்டு பத்ரி வந்த திரிசூலத்தை தன் தபோ பலத்தால் ஈசனின் கைக்கே திருப்பி அனுப்புகிறார் நாராயண ரிஷி. நான் அமர்ந்த இடம் கேதார்நாத் என்று பெயர் பெறும். பத்ரிகாஸ்ரமத்தில் எனது திரிசூலம் விழுந்த இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றி, காலம் காலமாக இங்கு வரும் பக்தர்களின் நோய் தீர்க்கும் தீர்த்தமாகச் செயல்படும் தேவர்களும் மனிதர்களும் வழிபடும் விஷ்ணு, சிவ ஸ்தலங்களாக பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் திகழும் என்று கூறி அருளினார்.

🔱சனாதன தரர்மத்தை பரப்பவும், தர்மத்தையும் ஞானத்தையும் நிலை நிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் பகவான் நாராயணர் தன்னை இரு பகுதியாக ஆக்கியதே நர நாராயணர் அவதாரம்.

🔱இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

🔱மஹாவிஷ்ணுவின் நான்கு வடிவங்களில் முதல் வடிவம் இது அதாவது தவத்துறவுகளில் ஈடுபட்டு சிருஷ்டிக்கு உதவுவது 

🔱நாராயண ரிஷி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து தன் தபோ பலத்தால் நரன் என்ற ரிஷியை உண்டாக்கினார் என வியாசர் கூறுகிறார்.

🔱நர நாராயணர் பிறந்தவுடன் வேதவியாஸ ரூபத்தைப் போலவே இவர்களும் பதரிகாஸ்ரமத்திற்கு புறப்பட்டனர்.

நரே விஷ்ணு: ஸமாவிஷ்ட: ஸ்வயம் நாராயணோ ஹரி: |
அர்ஜுனே ச நராவேஷ: க்ருஷ்ணோ நாராயண: ஸ்வயம் ||

🔱மகாபாரத காவியத்தில், அர்ஜுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

🔱மகாபாரதம்,  ஹரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் ஆதிசேஷ னின் அவதாரமாகவும்; நாராயணன் திருமாலின் அவதாரமாகவும் கருதப்படுகிறது.

🔱நாராயண ரிஷி சாட்சாத் ஸ்ரீஹரியே ஆகும். ஆனால், சேஷாவதாரமான நரனிடம் ஸ்ரீஹரியின் ஆவேசம் மட்டும் இருந்தது. இந்திர அம்சனான அர்ஜுனனிடம் நரனின் ஆவேசம் மட்டும் இருந்தது.

🔱டம்போத்பவ என்று ஒரு அரசன் இருந்தான். மொத்த பூலோகமும் அவனின் கீழ் இருந்தது. அவன் ஒரு நாள் தன் நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து - நம்மைப் போல ஆயுதம் தரித்தவர்கள், போர் புரிபவர்கள் இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள் - என்று கேட்டான்.

ராஜனிடம் எல்லா நற்குணங்களும் இருந்தாலும், கர்வம் மிக அதிகமாக இருந்தது. தனக்கு சமமானவர் வேறு யாருமே இல்லை என்றே நினைத்திருந்தான். ஒரு முறை அல்ல, பல முறை தன் மக்கள் எதிரே இப்படி கர்வத்துடன் பேசிவந்தான். எரிச்சலடைந்த அந்த நாட்டு முனிவர்கள் ஒரு நாள் - உலகத்தை வென்ற அரசர்கள் நீ மட்டும் அல்ல, இன்னும் பலர் இருக்கின்றனர் என்று ராஜனிடம் சொல்லியே விட்டனர்.

ரிஷிகளின் பேச்சைக் கேட்ட டம்போத்பவன் மிகக் கோபமடைந்தான். ’யார் இருக்கிறார்கள்? கூட்டி வாருங்கள் அவனை’ என்று ஆவேசம் கொண்டான். ரிஷிகள் நர நாராயணர்களின் பெயரைச் சொல்லி, இவர்களின் முன் நீ ஒரு புல்லுக்கட்டுக்குக்கூட சமானமில்லை என்றனர். அதைக் கேட்டதும், ராஜன், நர நாராயணர்களின் மேல் போர் புரிவதற்காக தன் சேனையுடன் புறப்பட்டுவிட்டான். 

🔱நர நாராயணர்கள் கந்தமாதன பர்வதத்தில் தவம் புரிந்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு இடையூறு விளைவிக்குமாறு, ராஜன் போரை துவக்கிவிட்டான். நாங்கள் தபஸ்விகள். எங்கள் மேல் ஏன் போர் தொடுக்கிறாய்? பல துஷ்ட ‌ஷத்ரியர்கள் பூலோகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் போர் புரிவதுதானே என்று நர நாராயணர்கள் கேட்டனர். அதைக் கேட்காத டம்போத்பவ, திரும்பத்திரும்ப அவர்களையே போருக்கு அழைத்தான். அப்போது, நாராயணன் நரனுக்கு சைகை செய்து, ராஜனை அழிக்குமாறு கூறினார். 

🔱தவத்திலிருந்த நரன் ஒரு புல்லினைப் பிய்த்து ராஜன் மேல் எறிந்தார். அதிலிருந்து பற்பல பயங்கரமான ரூபங்களைக் கொண்ட துர்க்கை தோன்றி, ராஜனின் மொத்த சேனையையும் அழித்துவிட்டாள். டம்போத்பவ ராஜன் மட்டுமே மிச்சம் இருந்தான். அப்போது அவனது கர்வம் முழுக்க அழிந்தது. நரனின் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். ’இனி இப்படி வேறு யாரையும் கேலி பேசினால், உனது அழிவிலிருந்து நீ தப்பிக்க முடியாது’ என்று நரன் தெரிவித்தார். 

🔱நர நாராயணரின் இந்தக் கதையை, கிருஷ்ண அர்ஜுனனுக்கு, உத்யோக பர்வத்தில் பரசுராமர் தெரிவிக்கிறார். 

இவர்கள் இருவரும் ரிஷிகள் என்று பாகவத பதினோறாவது ஸ்கந்தம் தெரிவிக்கிறது.

தர்மஸ்ய தக்‌ஷதுஹிதர்யஜனி ஸ்வமூர்த்யா
நாராயணோ நர இதி ஸ்வத: ப்ரபாவ: |
நைஷ்கர்ம்ய லக்‌ஷணமுவாச சசார யோக
மத்யாபி சாஸ்த ரிஷிர்யனிஷேவிதாங்க்ரி: ||

🔱நாராயணரின் ஊருவிலிருந்து (தொடையிலிருந்து) பிறந்ததால் இவளுக்கு ஊர்வசி என்று பெயர். தொடையிலிருந்து பிறந்த ஆயிரம் பெண்களிலிருந்து ஒருவரை மட்டும் ஸ்வர்க்க லோகத்திற்கு அனுப்பினார். தன்னிடமிருந்து பிறந்தவளின் அழகைக் காட்டுவதற்காக இவள் ஒருத்தியை மட்டும் தேவலோகத்திற்கு நாராயணர் அனுப்பிவைத்தார். 

🔱 இன்று கூட நாராயண ரூபியான ஸ்ரீஹரி தவத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் இடம், இன்றைய பத்ரிகாஸ்ரமம் அல்ல, அதற்கும் மேலே பெரிய பத்ரிகாஸ்ரமம் உள்ளது. அங்கு இவர் தவத்தில் இருக்கிறார் என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 
இன்றும் மேல்பதரியில் பல புண்ணிய மஹனீயர்கள் - ஸ்ரீ வேத வ்யாஸர் , நர நாராயண ரிஷி, ஸ்ரீமன் மத்வசார்யர் வசிப்பதாக ஐதீகம்.

பாரதேSபி வர்ஷே பகவான் நரநாராயணாக்ய ஆகல்பாந்த
முபசேததர்ம ஞானவைராக்ய ஐஸ்வர்யோ பஷமூபரமாத்மோபலம்போS
அனுக்ரஹா மத்மவதாரமனுகம்பயா தபூSவைக்தகதிஸ்சரதி ||

🔱நரநாராயணர்களை சந்தித்த பின்னர் தான் நாரதர் தவமிருந்து மஹாவிஷ்ணுவை தரிசிக்கிறார்.

🔱ஸ்கந்தபுராணத்தின்படி அசுரர்களிடம் இருந்து நரனே அமிர்தகலசத்தை மீட்டு கொடுத்து அதை மோகினி வடிவில் இருந்த விஷ்ணு தேவர்களுக்கு தரும்வரை அசுரர்களை சமாளிக்கிறார்.

🔱நர-நாராயணர்கள் மற்றும் மஹாவிஷ்ணுவை தவிர்த்து முனிவர்கள், தேவர்கள் என எவராலும் ஈசனை அவ்வளவு எளிதாக காணமுடியாது. 

🔱12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் நர-நாராயணர்கள் பூஜித்தது தான். பின் அவர்கள் கேட்ட வரத்தின்படி ஈசன் அங்கே எழுந்தருளினார்.

🔱அவ்வாறே சிவ சஹஸ்ரநாமத்தில் நரநாராயணப்பிரியன் என்ற பெயரும் ஈசனுக்கு உள்ளது.

🔱நரநாராயணர்களை சந்தித்த பின்னர் தான் நாரதர் தவமிருந்து மஹாவிஷ்ணுவை தரிசிக்கிறார். மஹாவிஷ்ணுவை தரிசித்தபின்னர் நரநாராயணர்களை காணவரும்போதே மஹாவிஷ்ணுவிடம் உள்ள அடையாளங்களானமார்பில் ஸ்ரீ வத்சம், உள்ளங்கையில் ஹம்சரேகை பாதத்தில் சக்ர குறி நான்கு கரங்கள் ஆகியவற்றை கண்டு இது நான் கண்ட மஹாவிஷ்ணுவின் அடையாளங்கள் ஆயிற்றே எனில் இவர்கள் நான் கண்ட அநிருத்த ரூபத்திற்கு இணையானவர்கள் என அவர்களை வலம் வந்து அமர்கிறார்.

🔱நர-நாராயண ஆசிரமத்தில் 1000 தேவ வருடங்களுக்கு நாரதர் வசித்தார்.

🔱பாகவதமே நாராயண ரிஷி நாரதருக்கு உரைத்தது அதை அவர் வியாசருக்கு அறிவுறுத்த வியாசரிடம் இருந்து சுகதேவர் கற்றார்.

🔱பிரம்மலோகத்தில் நான் கண்ட நர-நாராயணர்களே அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனாக அவதரித்தனர் என திருதராஷ்டிரனிடம் நாரதர் உரைத்தார்.

🔱நாரதர் விருஷ்ணிகளிடத்தில் கூறும்போது புவியில் பெரும் போருக்கான தேவை ஏற்படும்போது அவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்றுரைத்தார்.

🔱 இந்த நர நாராயண ரிஷிகளின் பிறப்பையும் பிரபாவங்களையும் தேவி பாகவதம் நான்காம் ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம். அதில் எட்டு ஒன்பதாவது அத்தியாயங்கள் கூறும் சுவையான நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

🔱 ஸ்ரீமத் பாகவதம் (பதினொன்றாம் ஸ்கந்தம், அத்தியாயம் : 4)
நர நாராயண ரிஷிகள் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் தவம் புரிவதையும் (பனிரெண்டாம் ஸ்கந்தம் அத்தியாயம்:39) மார்கண்டேய மஹரிஷி நர நாராயணரின் மஹிமை பற்றி ஸ்தோத்ரம் செய்வதையும் விரிவாக விளக்குகிறது..


🔱கர்ணனின் பூர்வ அவதாரமான சஹஸ்ர கவசன் என்னும் அரக்கனின் 999 கவசங்களை அறுத்தெறிந்து, அடுத்த யுகத்தில் அவன் கர்னணனாக பிறகும் பொழுது, நர நாராயணர் கிருஷ்ண மற்றும் அர்ஜுனனாக பிறந்து அழிக்கின்றனர்.

🔱சுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.

🔱 பாரத தேசத்தில் ஸ்ரீஹரி, நர மற்றும் நாராயண என்னும் இரு ரூபங்களில் இருக்கிறார். தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய, ஹரியிடம் பக்தி, இந்திரிய நிக்ரஹம், பரமாத்மாவை காண்பது ஆகிய தபஸ்விகளின் அனைத்து குணங்களையும், அவை இப்படிதான் இருக்கவேண்டும் என்று காட்டியவாறு, தன் பக்தர்களை தொடர்ந்து அருளுவதற்காக கல்ப முடிவு வரைக்கும் தவத்தினை செய்துவருகிறார்.





12 comments:

  1. அத்புதமான பதிவு

    ReplyDelete
  2. Very nice and exhaustive article

    ReplyDelete
  3. வியக்க வைக்கும் புதிய விஷயங்கள்
    மிக அருமை. Jaisairam

    ReplyDelete
  4. தங்களின் ஆன்மீகப் பதிவு அற்புதம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. Much informative. Beautiful writing. Please do continue writing to enlighten us

    ReplyDelete
  6. மிகவும் அருமை. பல நல்ல ஆன்மீக தகவல்கள்.

    ReplyDelete
  7. Very interesting and informative facts about Nara-Narayana.

    ReplyDelete