Wednesday, July 8, 2020

ப்ரத்யும்னன்


கிருஷ்ணருக்கும் ருக்மிணி தேவிக்கும் மன்மதனின் அம்சமாக பிறந்தவன் ப்ரத்யும்னன். கிருஷ்ணரின் ஜேஷ்ட குமாரன். காமனின் அம்சம் என்பதனாலோ அல்லது கிருஷ்ணரின் வீர்யம் என்பதனாலோ உலகையே வசீகரிக்கும் பேரழகுடன் பிறந்தான். 

‘ப்ரத்யும்னன்' என்றால் – உலகத்தைப் படைப்பவர் என்று பொருள்

கிருஷ்ணரின் மானஸிக புத்ரனாக அவருடைய மனஸிலிருந்தே இவன் தோன்றியதால் இவனுக்கு மனஸிஜன் என்ற பெயருமுண்டு. தோற்றத்தில் அச்சு அசலாக ஸ்ரீ கிருஷ்ணரை போலவே இருந்தான்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 294 ஆவது பெயர் ‘காமஹா’ என்பது ப்ரத்யும்னனை குறிக்கும்

மஹாவிஷ்ணுவுக்கு ஐந்து நிலைகள் உண்டு.
பரம்
வியூஹம்
விபவம்
அந்தர்யாமி
அர்ச்சம்

இரண்டாவது நிலை வியூஹம். பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.

வியூஹ வாசுதேவனிடமிருந்து அறிவு, பலம்  என்ற இரண்டு குணங்களைப் பெற்று சங்கர்ஷணர் விளங்குகிறார். அறிவைக்கொண்டு அவர் சாஸ்திரங்களை உருவாக்குகிறார். பலத்தைக்கொண்டு பிரளய காலத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கிறார்.

சங்கர்ஷணரிடமிருந்து ப்ரத்யும்னரும், ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தரும் உருவாகிறார்கள். ப்ரத்யும்னர் வீரம், வீரியம் (ஆற்றல்)  என்ற இரு குணங்களைக்கொண்டு எல்லா உலகங்களையும் உருவாக்கி, அங்கே தர்மம் நிலைபெறச் செய்கிறார்.

ருக்மிணி- கிருஷ்ணர் கல்யாணம் 
விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ருக்மி என்னும் மகனும், ருக்மிணி என்னும் மகளும் இருந்தனர். அழகில் சிறந்த ருக்மிணியும், கிருஷ்ணரும் காதல் கொண்டனர். ருக்மிணி தன் காதலை தன் தந்தை பீஷ்மகனிடம் தெரியப்படுத்தினாள். ஆனால், ருக்மிணியின் சகோதரன் ருக்மி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். தன் தங்கையை, தன்னுடைய உற்ற தோழனான சிசுபாலன் என்பவனுக்கு மணம் முடித்து வைக்கும்படி தந்தையிடம் வற்புறுத்தி சம்மதமும் வாங்கி விட்டான். இந்த சிசுபாலன் வேறு யாருமல்ல சனகாதி முனிவர்களால் சாபம் பெற்று பூமியில் அவதரித்த விஷ்ணுவின் த்வார பாலகர்களில் ஒருவன். கிருஷ்ணரின் அத்தை மகன்.

எல்லா நாட்டுக்கும் மணஓலை அனுப்பப்பட்டது. சிசுபாலனின் நண்பர்களான ஜராசந்தன், பௌண்டரகன் என்று பலரும் அழைப்பிதழை பெற்றனர். அவர்கள், திருமண வைபவத்தைக் காண விதர்ப்பதேசம் வந்தனர். விருப்பமில்லாத திருமணத்தை தடுத்து நிறுத்த, ருக்மிணி கிருஷ்ணருக்கு ஒரு பிராமணர் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பினாள். இந்த பிராமணர் இம்மகத்தான சேவைக்காக ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தராக அவதாரம் புரிந்தார் என்று நமது முந்தைய பதிவில் கண்டோம். திருமணத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு கிருஷ்ணரும், பலராமன் மற்றும் யாதவர்கள் புடைசூழ விதர்ப்பதேசம் புறப்பட்டு வந்தார்கள். திருமணம் நடக்கும் முன்பு, கிருஷ்ணர் மணப்பெண்ணான ருக்மிணியை தூக்கிக் கொண்டு துவாரகைக்கு தேரில் கிளம்பினார். ருக்மிக்கு தகவல் தெரிந்தது. அவன் கிருஷ்ணரைக் கொல்வேன் என்று சபதம் செய்து, அவரைத் துரத்தினான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ருக்மியை கிருஷ்ணர் வீழ்த்தினார். பின்னர், ருக்மிணியோடு துவாரகை சென்றடைந்தார். ருக்மிணி- கிருஷ்ணர் கல்யாணம் விமரிசையாக நடந்தது. 

ப்ரத்யும்னன் ஜனனம்
சிறிது காலத்தில், மன்மதனின் அம்சத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மிணி. அவனுக்கு ப்ரத்யும்னன் என்று பெயரிட்டனர். பகவான் வாசுதேவருடைய அம்சமான காமதேவன் முன்பு சிவ பெருமானின் கோபத்தால் எரிந்து சாம்பலானார். பிறகு அவர் ருக்மிணியின் கர்பத்தில் மீண்டும் பிறவியெடுத்தார். ப்ரதியும்னரை எதிரி என்றெண்ணிய சம்பரன் என்ற அசுரன், பிறந்த பத்து நாட்களுக்குள் அக்குழந்தையை அபகரித்துச் சென்று சமுத்திரத்தில் எறிந்துவிட்டு நாடு திரும்பினான். ஒரு சக்திவாய்ந்த மீன் ப்ரதியும்னரை விழுங்கியது. அந்த மீனைச் செம்படவர்கள் பிடித்து சம்பரனுக்கே காணிக்கையாகக் கொடுத்தனர். அவனுடைய சமையற்காரர்கள் அந்த மீனை வெட்டியதும் அதன் வயிற்றில் ஒரு குழந்தையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் அக்குழந்தையைக் வேலைக்காரியான மாயாவதியிடம் சமையற்காரர்கள்  கொடுத்தனர். அச்சமயத்தில் நாரத முனிவர் தோன்றி குழந்தை யாரென்பதை அவளிடம் கூறினார். மாயாவதி உண்மையில் காமதேவனின் மனைவியான ரதிதேவியாவாள். தன் கணவர் புதியதொரு உடலில் பிறவியெடுப்பதற்காகக் காத்திருந்த சமயத்தில், அவள் சம்பரனின் வீட்டில் சமையல்காரியாக பணியாற்றி வந்தாள். இப்பொழுது குழந்தை யாரென்பதை அறிந்த அவள், குழந்தையிடம் மிகவும் பாசம் கொள்ளத் துவங்கினாள். 

சம்பராசுன் வதம்
ஒரு சமயம் ப்ரத்யும்னனை அணுகிய ரதிதேவி, காதல் மனோபாவத் தோடு விளையாட்டாக தன் புருவங்களை அசைத்தாள். அவளைத் தன் தாயாக பாவித்த ப்ரதியும்னர், அவள் தாய்க்குரிய மனோபாவத்தை விட்டு ஒரு காதலியைப் போல் நடந்து கொள்வது முறையன்று என்று கூறினார். பிறகு தாங்களிருவரும் யாரென்பதை ப்ரதியும்னரிடம் கூறிய ரதி, சம்பரனைக் கொன்றுவிடும்படி அறிவுரை கூறினாள். பிறகு அவருக்கு உதவும் வகையில் மகாமாயை என்ற மாயமந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். ப்ரதியும்னரும் சம்பரனிடன் சென்று, பல அவதூறுகளால் அவனுக்குக் கோபமூட்டி, போருக்கழைத்தார். இதனால் கோபாவேஷமடைந்த சம்பரன் , தன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான். அந்த அசுரன் பிரதியும்னருக்கு எதிராகப் பல வசிய சக்திகளைப் பிரயோகிக்க முயன்றான். ஆனால் ப்ரதியும்னர் அவற்றையெல்லாம் மகாமாயை மந்திரங்களால் தடுத்து, சம்பரனைத் தமது வாளால் சிரத்சேதம் செய்தார். அப்பொழுது ரதிதேவி ஆகாய மார்க்கமாக ப்ரத்யும்னனை துவாரகைக்கு அழைத்துச் சென்றாள்.

ப்ரத்யும்னன் துவாரகையில் பெற்றோரை சந்தித்தல்
ருக்மிணி தேவி ப்ரதியும்னரைக் கண்டபொழுது, தாய்ப்பாசம் மேலோங்கி, அவளது ஸ்தனங்களிலிருந்து பால் பெருகியோடத் துவங்கியது. ப்ரதியும்னர் கிருஷ்ணரைப் போலவே காணப்படுவதைக் கவனித்த அவள், அவர் யாரென்பதை அறிய ஆவல் கொண்டாள். தன் மகன்களுள் ஒருவன் பிரசவ விடுதியிலிருந்து கடத்தப்பட்டதை அவள் நினைவு கூர்ந்தாள். "அவன் உயிருடன் இருந்திருந்தால், தன்முன் நிற்கும் இந்த ப்ரதியும்னனுக்கு ஒத்த வயதினனாக இருப்பான்." என்று அவள் எண்ணினாள். ருக்மிணி இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்திருந்த பொழுது பகவான் கிருஷ்ணன் தேவகியுடனும், வசு தேவருடனும் அங்கு வந்தார் பகவான் நிலைமையை நன்கு புரிந்து கொண்ட போதிலும் மௌனமாகவே இருந்தார். பிறகு நாரதமுனி அவ்விடம் வந்து அனைத்தையும் விளக்கினார். விவரமறிந்து ஆச்சரியப்பட்ட அனைவரும் பேரானந்ததுத்துடன் ப்ரதியும்னரை தழுவிக் கொண்டனர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ப்ரத்யும்னன் மற்றும் அவனின் மைந்தன் அநிருத்தன் சரிதம் இடம் பெறுகிறது. இவ்விரண்டு சரிதம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம்.

பார்த்தசாரதி ஸ்துதியில்,
பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச 
ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்
 ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர 
பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ) 
பொருள்: இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன். 

நாச்சியார் கோயில்
ஸ்ரீநிவாஸப் பெருமாள் மூலவருக்கு இடது புறம் ப்ரத்யும்னரும், அநிருத்தரும், புருஷோத்தமனும் வலப்புறம் சங்கர்ஷணர் என்ற பலராமரும் உள்ளனர்.

பகவான் ஸ்ரீ மன் நாராயணனிற்கு 1000 நாமங்கள் இருந்தாலும் பின்வரும் 24 திருநாமங்கள் ஜபிப்பது மிகவும் புண்ணியம் தரும். அதில் 6 மற்றும் 8 ஆம் திருநாமங்கள் முறையே ப்ரத்யும்னன் மற்றும் அநிருத்தனை குறிப்பிடுகின்றன என்றால் இதன் மகத்துவம் நமக்கு நன்கு விளங்கும். அநிருத்தன் ப்ரத்யும்னனின் புத்திரனும்  ஸ்ரீ க்ரிஷ்ணரின் பேரனும் ஆவான்.



ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து 
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணாய நம







13 comments:

  1. அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. Everytime you are giving us an opportunity to know about an unique divine chracter along with their history.

    ReplyDelete
  3. Nice anna thank you for sending me.

    ReplyDelete
  4. You are doing a great service in presenting unknown details. of purana /ithihasa characters. Thanks.

    ReplyDelete
  5. You are selecting unknown characters from Ihikasa/Puranas& presenting us in a beautiful way Actually idont know about Him Please contiune your spritual work soas to enable us to know new information Hats up Mr Raghu Raman God bless you

    ReplyDelete
  6. super sir, please continue your spiritual work.

    ReplyDelete
  7. அருமை. நன்றி. தஙகளின் அடுத்த அருமையான பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. அருமை இதுபோன்ற நல்ல பதிவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா மேலும் பல கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  9. Thanks Raghu. The life of Lord Krishna's son and grandson explained by you is very well.May continue your spiritual journey.

    ReplyDelete
  10. Nice to know about Lord Krishna's son

    ReplyDelete
  11. அருமை. அறியாத ஆன்மீக செய்திகளை அள்ளி வழங்கும் தாங்கள் மென்மேலும் வளர கடவூளை பிராத்திக்கிறோம்.

    ReplyDelete