Wednesday, July 1, 2020

ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் (1480 - 1600)

எனது பதிவுகள் தொடர்ந்து ஆன்மிகமலர் e-magazine வெளியிடப்படுகிறது.
http://www.aanmeegamalar.com/
My Article Published in Aanmeegamalar
My Article Published at Page No 13, 34-36
My Article Published at Page 36-37







மத்வ மட யதிகளில் பிதாமஹராக ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ தீர்த்தரும், ஞானத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஜெய தீர்த்தரும், நேத்திரமாக வ்யாசராஜ தீர்த்தரும், கலைகளில் ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரும், ஆத்மாவாக ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரும், ஹ்ருதயமாக கருதப்படுபவர் ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர். இவரின் காலத்தில் த்வைத சித்தாந்தம் செழித்தோங்கியது என்றால் மிகையாகாது. இவர் லதவ்ய என்னும் ருஜு தேவதை அவதாரம். இவர் மகாவிஷ்ணுவின் ஞான அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவ உபாசகர். வெகு சில மஹனீயர்களே ஸ்ரீ ஹயக்ரீவ உபாசனை மேற்கொண்டனர். ஸ்ரீ பாதராஜர் பள்ளியில் படித்து அனைத்திலும் முதன்மையாக விளங்கினார். ஸ்ரீ வ்யாசராஜ தீர்த்தர் இவரின் சம காலத்தவர். மத்வ யதிகளில் அதிக வருடம் (112) வருடங்கள் சந்யாச ஆசிரமம் ஏற்றவர் இவர் ஒருவரே. பழுத்த த்வைத ஞானி. பிரம்மா கலியுகத்தில் மனிதனுக்கு விதித்த 120 ஆண்டுகள் வாழ்ந்த ஒரே யதி. விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்ரீ வாதிராஜர் அடுத்த யுகத்தில் முக்ஹ்ய பிராண தேவராக (ஸ்ரீ வாயு பகவானாக) அவதாரம் எடுக்கிறார். பூர்வ புண்ணியம் பெற்ற வெகு சிலரால் மட்டுமே இவரை குருவாக அடையும் பாக்கியம் கிடைக்கும்.

தக்ஷிண கன்னட, கும்பாஸி என்ற ஊருக்கு அருகில், ஹுவினகரே கிராமத்தில் ராமாச்சார்யாருக்கும், புண்ணியவதி கௌரிதேவிக்கும் (கி.பி.1480, சார்வரி வருஷம், வைசாக மாதம், சுக்லபஷ துவாதசி, சனிக்கிழமை காலை 2 நாழிகை) அபார தேஜஸுடன் சர்வ லக்ஷணங்களுடன் குழந்தை பிறந்தது.

முன்னர் அளித்த வாக்கின்படி குழந்தையை ஸ்ரீ மடத்திற்கு அளித்தனர். அப்போது ஸ்ரீ மடத்தை நிர்வகித்த ஸ்ரீ வாகீச தீர்த்தர் மழலைக்கு, பூவராகவன் எனப் பெயர் சூட்டி, முறைப்படி, அக்ஷராப்யாசம், உபநயனம் ஆகியவற்றை மடத்தின் மூலம் நடத்தி வைத்தார்.

சந்யாசம் மேற்கொள்ளுதல்: -
ஸ்ரீ வாகீஸ தீர்த்தரிடம் வேதம், கல்வி ஆகியவற்றை கற்றுக் கொண்டார். ஸ்ரீ வாகீஸர், பூவராகவன் சந்யாசம் ஏற்பதை விரும்பினார்.,"அவ்வாறாயின், என் அந்திம காலத்தில் மக்கட்பேறில்லாத. குறையை ஸ்வாமிகள் போக்கவேண்டும்", என்றார் ராமாச்சார். பின்னர், ஸ்வாமிகளின் ஆசியினால், ராமாச்சார்யர்க்கு மற்றுமொரு மகன் பிறந்தான். தன் தமையனைக் கண்டும், தாய், தந்தையிடம் சந்யாசத்திற்கான அனுமதிபெற்று பூவராகவன் மடத்திற்கு திரும்பினார். ஓர் சுபயோக நன்னாளில் பூவராகனுக்கு, ஆசிகூறி, “ஸ்ரீ வாதிராஜர்", எனப் பெயர் சூட்டி சந்யாசம் வழங்கினார்.

தீர்த்த யாத்திரை: -
சந்யாசம் ஏற்ற பின், குருவின் அறிவுரைப்படி தீர்த்த யாத்திரை சென்றார். வடஇந்தியாவில் தொடங்கி தென் இந்தியா வரை நாட்டின் பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். அவர் நந்தி வாகனம் பற்றி ஓர் அபூர்வ ஸ்லோகத்தை இயற்றினார். அவர் இயற்றிய 235 ஸ்லோகங்கள் கொண்ட நூலான "தீர்த்தபிரபந்த" த்தைப் படித்தால், நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய ஸ்தலங்களையும், குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளலாம்.

லக்ஷ்மி சோபனே: -
தீர்த்த யாத்திரையின் போது, ஓர் கிராமத்திற்குச் சென்றார். அப்போது, அவ்வூர் முக்கியப் பிரமுகர் வீட்டுத் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென மணமகன் மயக்கம் அடைந்தார். அங்கு பதட்டம் நிலவியது. மணமகனை விஷப் பாம்பு தீண்டியது என்பதை அறிந்தனர். வைத்தியர்களால் அவரை குணப்படுத்த இயலவில்லை. திருமண வீட்டில் யாரோ கூறிய அறிவுரைப்படி, மணமகனை ஸ்ரீ வாதிராஜரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் " லக்ஷ்மி சோபனே" எனும் கீதத்தை இயற்றிப் பாட, மணமகன் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழிப்பது போல் எழுந்தார்.

லக்ஷ்மி சோபனே ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டது. இது விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ஒப்பானது. இன்றும் அதை மத சம்பந்தமான விழாக்களிலும், திருமண வைபவத்திலும் பாடுகிறார்கள். இதனை வெள்ளிக்கிழமை படிப்பது மிகவும் விசேஷம். இவர் பீடாபதியாக 112 வருடங்கள் இருந்தார். அதன் நினைவாக என்னவோ 112 ஸ்லோகங்களுடன் லக்ஷ்மி ஷோபனம் படைத்தார். என்ன ஒரு தீர்க்க தரிசனம்.

பகவான் ஹயக்ரீவரும், ஸ்ரீ வாதிராஜரும்:
ஸ்ரீ வாதிராஜர், தினமும், ஏகாந்தத்தில் அமர்ந்து பகவானுக்கு கடலை, வெல்லம் கொண்டு செய்யப்பட்ட பூரணத்தை பாத்திரம் ஒன்றில், தன் தலை மீது வைத்து நிவேதனம் செய்வார். ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை வடிவில், பின்புறமாக வந்து, அவரது தோளின் மேல் தனது இரு முன்னங்கால்களை வைத்து பூரணத்தை உண்டு, மீதியை ஸ்ரீ வாதிராஜருக்கு வைப்பது வழக்கம். ஒரு நாள், ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமையும், துவேஷமும் கொண்ட சிலர், பகவானுக்கு படைக்கும் பூரணத்தில், ஸ்ரீ வாதிராஜருக்கு தெரியாமல், விஷம் கலந்து விட்டனர். இதை அறியாமல், வழக்கம் போல், ஸ்ரீ வாதிராஜர் அதை பகவானுக்கு நிவேதனம்செய்தார். தேவ குதிரை பூரணத்தை முழுவதும் புசித்தது. உடன் அதன் உடல் முழுமையும், வெள்ளை நிறம் மாறி நீலநிறம் ஆகியது. காரணம் யாது என பகவானிடம் வினவ, பகவானும், " விஷம் கலந்த உணவாதலால் நிறம் மாறியது. நீ கவலைப் படவேண்டாம். மட்டூர் கிராமத்திற்கு செல், அங்கு ஆசாரங்களை அனுஷ்டிக்காத ப்ராம்மண விவசாயிகளைத் திருத்தி, அவர்கள் விளைவிக்கும் கத்திரிக்காய்களை 48 நாட்கள் எனக்கு நிவேதனம் செய்ய, என் நிறம் மாறும். ஆனாலும் இந்நிகழ்வின் அடையாளமாக சிறு துவரம் பருப்பு அளவில், என் கழுத்தில் நீல நிறம் இருக்கும்" எனக் கூறி மறைந்தார். ஸ்ரீ வாதிராஜர் அவ்வாறே செய்ய குதிரையின் நிறம் வெண்மையாக மாறியது. இன்றும் சோதே மடத்தில் பூஜையில் இருக்கும் ஹயக்ரீவ மூர்த்தி பிரதமையில் நீல நிறம் காணலாம்.

பூதராஜர் கதை: -

ஒருமுறை ஸ்ரீவியாசதீர்த்தர், யாத்திரையாக உடுப்பி வந்து சில காலம் தங்கி பூஜை, உபந்யாசம் ஆகியவற்றைச் செய்து வந்தார். ஓர் ஏகாதசியன்று, ஸ்ரீவாதிராஜர், பூஜை முடித்து அவ்விடத்திலேயே, தியானத்தில் ஆழ்ந்தார். மறு நாள் காலை, ஒருவர், ஸ்ரீ வியாச தீர்த்தர் தங்களை துவாதசி பாரணைக்கு அழைப்பதாக கூறவும், அப்படியே எழுந்து அங்கே சென்று போஜனம் செய்தார். ஸ்நானம் செய்யாமல் யதிகள் ஆகாரம் செய்ததை, சிஷ்யர்கள் பரிகசித்தனர். பாரணை முடிந்தவுடன், ஸ்ரீவாதிராஜர், யாருடனும் பேசாமல் ஆற்றங்கரை சென்றார். அவருடைய சிஷ்யரரும், பண்டிதரும் ஆன நாராயணாச்சார், யாரும் அறியாத வகையில் யதிகளைப் பின் தொடர்ந்தார். ஆற்றங்கரையிலே, யாருமே இல்லாத இடத்தில் ஓர் பாறையைச் சுத்தம் செய்து, தான் உண்டவைகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். அப்போது தான் சமைத்தவை போல் அவை சூடாறாமல் இருந்தது. ஸ்ரீ வாதிராஜர் குளித்து மடி உடுத்தி, முறைப்படி பூஜையை முடித்து, பின் பாறை மீதிருந்த போஜனத்தை உட்கொண்டார். மறைவிடத்திலிருந்து இதை அச்சத்துடன் கவனித்த  நாராயணாச்சாரை யதிகள் பார்த்து விட்டார். உடனே," மஹான்கள் காரியங்களை சோதனை செய்த நீ, இன்று முதல் பூதம் ஆவாயாக" என சபித்துவிட்டார். நாராணாச்சார், தன் தவற்றுக்கு வருந்தி, யதிகளின் பாதம் பற்றி, மன்னிப்பு கேட்டார்.

யதிகளும் கருணை காட்டி, "இந்த ஜென்மம் முழுவதும் பூதமாக காட்டில் இருப்பாயாக. உன் எதிர்ப்பட்டவரிடம் ஆகாமாவை என்றால் என்ன? எனக்கேள். எவராவது சரியான விடைகூறினால், என்னிடம் வா", என்றார். பூத ரூபம் எடுத்த நாராயணாச்சாரும், மூன்று வருடம் வருவோர், போவோரிடமெல்லாம் கேள்வி கேட்க யாரும் பதில் கூறவில்லை. ஓர் நாள், ஸ்ரீ வாதிராஜர் அக்காட்டு வழி சென்ற போது, பூதம் இடைமறித்து கேள்வி கேட்டது. யதிகள் அதற்கு சரியான விடையளிக்க, பூதத்திற்கு தன் முன்ஜென்ம ஞாபகம் வந்தது. யதிகளை வீழ்ந்து வணங்கினார். யதிகளும் பூதத்தை நோக்கி " உன் கஷ்டம் இன்றுடன் தீர்ந்தது.

ப்ராப்தத்தால் பூதமானாய். நீ பின்னர் ருத்ர பதவிக்கு வரக்கூடிய தேவாம்சம் உள்ளவன். நான் இவ்வுலகில் இருக்கும் வரை, நீ பூத ரூபத்துடன் என்னுடனே இருந்து, பக்தர்களுக்கு உபகாரம் செய்வதுடன், துஷ்டர்களைத் தண்டிக்கும் பலத்தையும் பெறுவாய்", என ஆசிவழங்கினார். பூதராஜரும் அவ்வாறே இன்றுவரை மக்களை காத்து வருகிறார். பூதராஜர் அடுத்த யுகத்தில் ஸ்ரீ ருத்ர தேவராக அவதாரம் புரிகிறார். இன்றும் சோதே வாதிராஜ ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ பூதராஜருக்கே பிரதான பூஜை செய்யபடுகிறது.

ஸ்ரீ வாதிராஜரின் அற்புதங்கள்: -
# பண்டரீபுரத்தில், விவசாயியின் நிலத்தில் விளைந்த கொண்டைக் கடலையை, ஓர் வெண்குதிரை மேய்வதைக்கண்ட விவசாயி, அதை விரட்ட, அது ஸ்ரீ வாதிராஜரின் மடத்துள் நுழைந்தது. இது பற்றி விவசாயி யதிகளிடம் கூற, அவரும் தன் திருஷ்டியால், பூஜைக்குப்பிறகு, தான் ஹயக்ரீவ மூர்த்தியை கட்டாமல் போனதின் விளைவு இது என அறிந்தார்." நல்லது, நீ சென்று வா" எனக் கூறினார். மறுநாள், நிலத்திற்குச் சென்ற விவசாயி, விளைந்த கொண்டைக் கடலை முழுவதும், தங்கமாய்மாறியிருக்க கண்டார். யதிகளிடம் இது பற்றிகூற, அவரோ, "நீ மிகவும் புண்ணியம் செய்தவன் பகவானின் தரிசனம் உனக்கு கிட்டியது", எனக் கூறினார். விவசாயியும் மனம் மகிழ்ந்து, அந்த விளைநிலத்தை மடத்திற்கு அளித்ததுடன், தானும் யதிகளின் தாசன் ஆனார்.

#  பொற்கொல்லர் ஒருவர், பிள்ளையார் விக்கிரகம் செய்ய, உலோகம் உருக்கி வார்ப்பில் இட, யாவும் ஹயக்ரீவமூர்த்தியாக வந்தது. யதிகளிடம் ஹயக்ரீவ மூர்த்தியை அளித்தவுடன் யாவும் சரியாக வந்தன.

# யதிகள் தீர்த்த யாத்திரை செல்கையில், ஓர் தம்பதிகள் பிள்ளை வரம் வேண்ட, யதிகளோ,"தங்களுக்கு இப்பிறவியில் குழந்தை பாக்யம் இல்லை எனவும், அடுத்த பிறவியில் உண்டு" எனக் கூறினார். யதிகள் அவ்வூரை விட்டுசென்றதும், ஓர் மந்திரவாதி உதவியால், ஆண்குழந்தையைப்பெற்றெடுத்தனர். மறுமுறை, யதிகள் அவ்வூருக்கு வந்தபோது, குழந்தையை அவருக்கு காட்ட, விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்து வந்து அவர் முன் நிறுத்தினர். யதிகள் அவன் மேல், சங்குதீர்த்தம் தெளிக்க, குழந்தை ப்ரம்ம பிசாசாக மாறியது. "தனக்கு 12 வயதானவுடன், தம்பதிகளைக் கொன்றுவிட்டு தன்னிடம் வருமாறு மந்திர வாதி கூறினான்"என பிசாசு கூறியது. யதிகள் அதற்கு விடுதலை அளித்தார். தம்பதிகள் தவற்றுக்கு வருந்தினர்.

# சோதே மடத்தில், கோவில் வேலைகள் நடைபெறும்போது, கோபுர உச்சிக்கு எடுத்துச் சென்ற பெரிய சதுரக்கல், சங்கிலி அறுந்து கீழே விழும் நிலை. கல் கீழே விழுந்தால், பலர் உயிர் இழக்க நேரிடும். இதைக் கவனித்த, தலைமை அதிகாரி, கல்லை நோக்கி, "ஸ்ரீ வாதிராஜர் மேல் ஆணை!, நீ கீழே விழக் கூடாது" என்றதும், கல் அந்தரத்தில் அப்படியே நின்றது. பின் யதிகள் அங்கு வந்து, பூதராஜரை கொண்டு அக் கல்லை சரியான இடத்தில் பொருத்தச் செய்தார்.

# உடுப்பிக்கு அருகில், ஓர் கிராமத்தில், மணமகன், பூ நாகம் தீண்டி, மரணமுற்ற நிலையில் யதிகளிடம் எடுத்துச் சென்றனர். யதிகள் "லஷ்மீஷோபானம்" இயற்றி பாட மணமகன் உயிர்த்தெழுந்தார்.  

# மஹா பாரதத்திலுள்ள லஷம் கடின பதங்களுக்கு அர்த்த நிர்ணயம் செய்து, தாயாருக்கு அளித்த வாக்குறுதியான லஷாபரணத்தை நிறைவேற்றினார்.

# யதிகள் பூதராஜரிடம், இமாலயத்திற்கு சென்று பகவான் திருவிக்ரமரைப் பிரார்த்தித்து, அவரை சோதேக்கு அழைத்து வரக் கூறினார். பூதராஜரும் அவ்வாறே, பகவானை, அவர் ரதத்துடனே தன் தோளில் ஆகாய மார்க்கம் சுமந்து வந்தார். வழியில் தடை செய்த, முகாசுரன் எனும் அரக்கனை, தேர்ச் சக்கரம் ஒன்றை கழற்றி அடித்து கொன்றார். ஸ்வாமியின் ப்ரதிஷ்டை ரதத்துடன் செய்யப்பட்டது. தேருக்கு மூன்று சக்கரங்கள் மட்டுமே உள்ளது. இன்றும் நாம் அக்கோயிலைக் காணலாம்.

# அவருடைய பூனே விஜயத்தின் போது, அவ்வூர் அரசன் சமஸ்கிருதப் பாடல்களுக்கான போட்டி அறிவித்தான், அதில் வெற்றி பெறுபவரை யானை மேல் அமர்த்தி ஊர்வலமாய் அழைத்துச் செல்வதுடன், விசேஷமான பட்டங்களை அளித்து அங்கீகரிப்பதாக அறிவித்தான். இதில் ஸ்ரீ வாதிராஜர் கலந்து கொண்டு, 20 நாட்களில் 19 காண்டங்களில் 1240 செய்யுளைக் கொண்ட "ருக்மணீஸ  விஜய " எனும் நூலை அரங்கேற்றி வெற்றி வாகை சூடினார். அரசனும், ஸ்ரீ வாதிராஜரை யானை மீதமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன், "கவிகுல திலக" எனும் பட்டம் சூட்டினார். துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ருக்மணி தேவிக்கும் ஓர் ப்ராஹ்மண அந்தணர் தூது சென்றார். இம் மகத்தான பணிக்காக ஸ்ரீ கிருஷ்ணர் மகிழ்ந்து அவ்வந்தணர் கலியுகத்தில் ஸ்ரீ ஸ்ரீ வாதிராஜ தீர்த்தராக பிறந்து பூர்வ ஜன்மாவில் தான் கண்ட அனுபவங்களில் இருந்து இப்புனித நூலை இயற்றினார்.

#  ஒரு முறை, மிகவும் கடன்பட்ட ஒருவர், ஸ்ரீ வாதிராஜரிடம் சரணடைந்தார். அவரின் நிலை கண்டு மனம் இரங்கிய வாதிராஜர், ஸ்ரீ மகாலட்சுமியைத் துதித்து ஒரு ஸ்லோகம் பாட, தங்க நாணயங்கள் மழையெனப் பெய்தது. அதைக் கொண்டு, அந்த நபரை கடனை அடைக்கச் செய்து காப்பாற்றினார். அச் ஸ்லோகமே ஸ்ரீ சகுனதர்பனா எனப்படுகிறது. இது ஸ்ரீ ஸூக்தத்தின் பொருளையும் தன்மையையும் ஒத்துள்ளது. இதே போன்று ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரும் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரமும், ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ ஸ்துதி ஸ்தோத்ரமும் கூறி ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளால் ஸ்வர்ண மழை பொழிய வைத்தனர்.

# தர்மஸ்தலாவில் ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமியையும், சோதே மடத்திலும் உடுப்பி ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் ஆகிய ருத்ர தேவரையும் ப்ரதிஷ்டை செய்து ஈஸ்வர அனுக்கிரஹம் பெற்ற மஹான். இன்று, தர்மஸ்தலா எண்ணற்ற பக்தர்கள் தினமும் வழிபடும் ஸ்தலமாக உள்ளது.

# உடுப்பி பார்யாயத்தின் காலம் 2 மாதங்கள் என்று இருந்ததை, ஸ்ரீ வாதிராஜர் நிர்வாக செளகரியம் கருதி, அனைத்து மட பீடாதிபதிகளின் சம்மதம் பெற்று, 2 வருடங்களாக மாற்றி அமைத்தார். இதன் காரணமாக, ஒவ்வொரு பீடாதிபதிக்கும், அடுத்த பார்யாயத்திற்கு தயார் ஆவதற்கான போதுமான கால அவகாசம் கிடைத்தது.  இதற்காக மேல் பதரி சென்று ஸ்ரீ வேத வ்யாஸ ரிஷியிடமும் ஸ்ரீமன் மத்வசார்யரிடமும் அனுமதி பெற்றார் என்றால் இவரின் கீர்த்தி நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். பூத உடலுடன் மேல் பதரி செல்வது என்பது எவராலும் முடியாத காரியம் அன்றோ? இதற்கு சாக்ஷி பத்ரிநாத்தில் நாம் இன்றும் காணலாம்.

# ஒரு முறை, பாம்பினால் துரத்தி வரப்பட்ட எலியானது, ஸ்ரீ வாதிராஜர் அமர்ந்து பலகையின் கீழ் தஞ்சம் அடைந்தது, அதை துரத்திக் கொண்டு வந்த பாம்பு, ஸ்ரீ வாதிராஜர் அருகில் வந்தவுடன், கோபம் தணிந்து அமைதியானது. பின் அது ஸ்ரீ வாதிராஜரின் தண்டத்தில் வசித்தது. இது அவருடைய தவ வலிமைக்கு சான்றாக அமைந்தது.

# ஸ்ரீ வாதிராஜர் டெல்லி விஜயத்தின் போது, ஒரு சுல்தானின் மகன் சமாதியருகே, புனிதமான விக்கிரஹங்கள் உள்ள பூஜைப் பெட்டியை வைத்தார். அங்குள்ளவர்கள், சுல்தான் மகன் மறைவு குறித்தும், ஒரு நாள் முன்பு அவ்விடத்தில் உடலை அடக்கம் செய்தது பற்றியும் கூறி, வேறு புனிதமான இடத்திற்கு செல்லுமாறு வேண்டினார்கள். ஆனால், ஸ்ரீ வாதிராஜரோ, சுல்தானின் மகன் இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறான், எனக் கூற, அவர்கள் அதை மறுத்து, எங்கள் கண் முன்னரே, அவன் அடக்கம் செய்யப்பட்டான். எனவே, அதற்கு சாத்தியம் இல்லை என உரைத்தார்கள். ஸ்ரீ வாதிராஜரோ, சவப்பெட்டியை வெளியே எடுத்து, திறக்கும்படி கூறினார். வருத்தத்தில் இருந்த சுல்தான் தன் மகன் உயிர் பெறுவான் எனும் நம்பிக்கையில் அங்கு வந்து ஸ்ரீ வாதிராஜரின் கூற்றுக்கு சம்மதித்தார். ஸ்ரீ வாதிராஜர் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜபித்து, புனித நீரை சவப்பெட்டியின் மேல் தெளித்து, அதை திறக்கச் சொன்னார். சவப்பெட்டியைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். சுல்தானின் மகன் பெட்டியில் இருந்து தூங்கி எழுபவன் போல் விழித்து எழுந்தான். சுல்தான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அளவிடமுடியாத வைரம் மற்றும் தங்கத்தை, ஸ்ரீ வாதிராஜருக்கு பரிசாக அளித்தான். அவர் எவ்வளவோ மறுத்தும், பரிசுப் பொருட்களை காவலர் துணையுடன் அனுப்பியதுடன், பரிசுப் பொருட்களை அவருக்கு அளிக்காமல் திரும்பினால், காவலர்களை தண்டிப்பதாகவும் கூறினான்.

ஸ்ரீ வாதிராஜருடன், பரிசுப் பொருட்களுடன் உடுப்பி வந்த காவலர் தலைவன், அவரை நோக்கி தன் நிலையை எடுத்துக் கூறி, பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டினான். ஸ்ரீ வாதிராஜரோ, " பொருட்களின் மீது தனக்கு ஆசை இல்லை எனவும், பரிசுப் பொருள் யாவற்றையும் ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் பின்புறம் குழி தோண்டி அதில் போட்டு மூடியபின் அதன்மீது ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமியை ப்ரதிஷ்டை செய்ய வேண்டும்", எனக் கூறியதுடன் அவ்வாறே செய்து முடித்தார். மேலும் அஷ்ட மடங்களுக்கு, தேவை ஏற்படும்போது இதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார். இன்றும் நாம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில், அவ்விடத்தில் ஸ்ரீ வாசுகி சுப்ரமண்யாவைக் காணலாம்.

ஸ்ரீ வாதிராஜரின் ப்ருந்தாவனப் பிரவேசம்
120 வருடங்கள் வாழ்ந்து, சோதேயில் ஒரு முறையும், உடுப்பியில் நான்கு முறையும் பார்யாய பூஜை செய்த ஸ்ரீ வாதிராஜர், ஷார்வாரி 1522 வருடம் (1600 AD), பால்குண மாதம், பகுள திதியில், அதிகாலை, தவளகங்கையில் குளித்து, ஆச்சார அனுஷ்டங்களை முடித்து, கையில் துளசிமணி மாலையுடன், தனது இஷ்ட தெய்வமான ஹயக்ரீவரை துதித்து, ஜீவனுடன் ப்ருந்தாவனத்துள் சென்று அமர்ந்து ஜெப மாலையை உருட்டி த்யானத்தில் அமர்ந்தார். அவர் முன்பே கூறியபடி, அவர் கையிலிருந்து ஜப மாலை நழுவியதும், வேதகோஷங்கள் முழங்க, அவரின் சீடர்கள், ப்ருந்தாவனத்தின் மேற்ப்பகுதியை பந்தனம் செய்தனர். அடுத்த நொடியில், அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் மல்லிகை வாசமும், வெள்ளி மணிகளின் சப்தமும் கேட்டது.  அனைவரும் வியந்து மேலே பார்க்கையில், தேவ விமானத்தில் ஸ்ரீ வாதிராஜர் அமர்ந்திருப்பதும், தேவர்கள் அவரை அழைத்துச் செல்வதையும் உணர்ந்தனர். ஸ்ரீ வாதிராஜர், தேவ விமானத்திலிருந்து தனது தங்க பாதுகைகளையும், காவி மேல் வஸ்திரத்தையும் கீழே இட்டார். இன்றும் நாம் இப்பாதுகைகளை சோதே மடத்தில் தரிசிக்கலாம். மேலும் தான் ப்ருந்தாவனத்தில் இருந்து அருள் புரிவதாகவும், பக்தர்களின் நியாயமான வேண்டுகோளை, பூதராஜர் மூலம் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். 

பக்தர்கள் நல்ல வசதியுடன் தங்குவதற்கு ஏற்ற இருப்பிடங்கள் திட்டமிட்டு சோதே மடம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடமானது சாலை வழியே பெங்களூருவிலிருந்து 418 கிமீ, ஹூப்ளியிலிருந்து 111 கிமீ மற்றும் மும்பையில் இருந்து 696 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் ஹூப்ளி. தகவல் தொடர்புக்கான அலைபேசி எண்கள் :083842 79685 மற்றும் 083842 90960.

இவரின் ம்ருதிக பிருந்தாவனம் தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர மடத்திலும் மற்றும் திருவல்லிக்கேணியிலும் அமைந்துள்ளது.

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதிநம்
நரம் முச்யந்தி பாபானி தாத்ரமேவ யோஷித
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய நிஸ் ஸரதே வாணீ ஜநுகன்யா ப்ரவாஹவத் 
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விஷோபித ஸ வைகுண்ட கவாடோத் காடனக்ஷம்
ஸ்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாம் கிதம்
வாதிராஜ யதிப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.

ஸ்ரீ வாதிராஜ பாஹிமாம் பூதராஜ ரக்ஷமாம்
ஸ்ரீ வாதிராஜ குரவே நம:






14 comments:

  1. Excellent spritual life history Every week your giving rare history of Hindu Mahan Iappreciate your sincere hard work My blessings Jai sri Vadhirajaya namaha

    ReplyDelete
  2. aanmeega malar artical 13 about satyaki information is great, 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு. நவராத்திரியில் பாராயணம் செய்யும் லலிதா சோபனமும் தாங்கள் மேல் கூறியுள்ள சோபனமும் ஒன்றா. தயவு செய்து விளக்கம் தரவும்

    ReplyDelete
    Replies
    1. லலிதா சோபனம் முழுக்க முழுக்க மாதா லலிதாம்பிகையே பற்றியது.
      லட்சுமி சோபனம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பற்றியது. இரண்டு வேறுபட்டவை. அனால் இரண்டையும் வெள்ளி கிழமை பாராயணம் செய்வது மிகவும் புண்ணியம் தரும்.தங்களின் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  4. மிகவும் சந்தோஷம் ஐயா. திகட்டாத பலவற்றை உங்கள் மூலம் அறிவதற்கு. நன்றி.

    ReplyDelete
  5. Thanks for excellent presentation of Guru Vathirajs Theerthar.

    ReplyDelete
  6. I read the holy life of sri sri vaathiraja theerthar.His life is example for others .

    ReplyDelete
  7. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டு இருக்கும் S.ரகுராமன் குருவிற்கு என் வணக்கங்கள். நீங்கள் செய்யும் இந்த சேவை எனக்கு மட்டும் அல்ல படிக்கிற அனைவருக்கும் புன்னியத்தைத் தேடி தரும்.

    உங்களின் சேவை தொடர ஆண்டவனின் அருள் கிடைக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. உங்களின் தொடர் ஆன்மிகமலர் இ-publishing Book இடம் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Many of us don't know about sodhe mutt because it's not as familiar a Sringeri or kanchi or ahobilam or yedugiri mutts. Very informative and you may enlighten us explaining other 4 mahaan mentioned in this blog

    ReplyDelete
    Replies
    1. Thanks for your valuable feedback.I have already enlighten other 2 mahans viz Sri Sri Padaraja Theerthar & Sri Sri Jayatheerthar. If you have time you may please visit. Already my research is going on for Sri Sri Vyasaraja Theerthar & Sri Sri Vijayeendra Theerthar.

      Delete
  10. நாராயணா! நாராயணா!! நல்ல பதிவு அய்யா. புதிதாக மகான்களை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete