Sunday, August 30, 2020

அனந்த (பத்மநாப) விரதம் - 01-09-2020


சந்திரனை ஆதாரமாக கொண்ட பஞ்சாங்கத்தின்படி, சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த சதுர்தசி விரதமாகும். 

பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் சம்பவிக்கும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும் நம் பூலோக இச்சைகளை முழுவதுமாக நிறைவேற்றி வைப்பதால் காம்யா விரதம் எனவும் அழைக்கப்படுகிறது. 

அனந்த விரதம் அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை அளிக்கக் கூடியது. ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுமங்கலிப் பெண்கள், விரதம் இருந்து அனந்த பத்மநாப சுவாமி படத்தை கிழக்கு பார்த்து வைத்து மலர் அலங்காரம் செய்ய வேண்டும். ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. 

இழந்த செல்வம், பொருட்கள் மற்றும் அனைத்தையும் மீட்டுத்தரும் அறிய விரதம் ஸ்ரீ அனந்த விரதம். 

இந்த பூஜையை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்வது சிறப்பு. இயலாவிட்டால், பெண்கள் செய்யலாம். பொதுவாக, இது பெண்களுக்கான விரதமாகவே கூற‌ப்பட்டிருக்கிறது. 

மிகுந்த ஆசாரத்துடன், நியமங்களை வழுவாது கடைப்பிடித்துச் செய்ய வேண்டிய பூஜையாகும் இது. பூஜை முடியும் வரை உபவாசம் இருப்பது கட்டாயம்.

பாத்ரபத மாத வளர்பிறை சதுர்த்தி அன்று இந்த விரதத்தை செய்ய வேண்டும். 14 முடிகள் போட்ட சிவப்பு வண்ணக் கயிற்றினை தயார் செய்து நதியில் நேரடி சிவப்பு வஸ்திரம் தரித்து கலசத்தை சிவப்பு வண்ணத்தினால் அலங்கரித்து கலசத்தில் நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். 

ஒரு சிவப்பு வஸ்த்ரத்தில் தாமரைப்பூவை வரைந்து அதன்மேல் கலசத்தை வைக்க வேண்டும். சில தர்ப்பைகளை எடுத்து பாம்பு போல் பின்னி கலசத்தின் மீது வைக்க வேண்டும். இதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை ஸ்ரீ அனந்தசயனனாக பாவித்து பூஜையை செய்ய வேண்டும். 

அப்புண்ணிய கலசத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு நான்கு கரங்களில் சங்கம், பத்மம், சுதர்சனம், கதை முதலியவைகளை கொண்டு வீற்றிருப்பதாக த்யானித்து, "ஓம் நமோ பகவதே" என்கிற மந்திரத்தால் தர்ப்ப  க்ரந்தியை பூஜிக்க வேண்டும். புதிய சிகப்பு பட்டு நூலை கொண்டு கலசத்தின் மீது வைத்து புருஷ ஸுக்தத்தினால் 16 விதமாக உபசரித்து "அதோ தேவேதி" என்கிற மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.

"ஸம்ஸாரேதி" என்கிற மந்திரத்தை சொல்லி புதிய அனந்த சூத்திரத்தை வலது புஜத்தில் கட்டி கொண்டு "நமஸ்தே வாஸுதேவா" என்கிற மந்திரத்தை சொல்லி பழைய நூலை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.

ஷோடசோபசார பூஜைகளும், அங்க பூஜையும் செய்து துதிக்க வேண்டும். அதன் பின், நோன்புச்சரடை ஸ்வாமியின் பாதத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் நிவேதனங்கள், பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மந்திர புஷ்பாஞ்சலி முடிந்த பிறகு,

அனந்தாய நமஸ்துப்யம் ஸஹஸ்ர சிரஸே நம:|
நமோஸ்து பத்மநாபாய நாகாநாம் பதயே நம:||

என்ற மந்திரத்தைக் கூறி, சரட்டை நமஸ்கரிக்கவும். பிறகு, மந்திரங்களைக் கூறி, நோன்புச்சரட்டை பக்தியுடன் அணிந்து, பிரார்த்தனை செய்யவும்.

நமஸ் ஸர்வஹிதானந்த ஜகதானந்தகாரக |
ஜீர்ணதோரம் வாஸூதேவ விஸ்ருஜாமி த்வதாஜ்ஞயா ||

"ததாச விஷ்ணுர் பகவான்" என்கிற மந்திரத்தை சொல்லி நெய்யுடன் கூடிய கோதுமையையும், பழங்களையும், ஆபூபம் (அப்பம்), தாம்பூலம், தக்ஷிணை (கலசத்துடன்) இவைகளை ஓர் வேதம் அறிந்த அந்தணர்க்கு தனது தகுதிக்கு ஏற்றவாறு தானம்  செய்ய வேண்டும். இவ்வாறு 14 ஆண்டுகள் 14 கலசங்களை தானம் செய்தால் எல்லா மனோபீஷ்டங்களும், நான்கு வித புருஷார்த்தங்களும், வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ்வர்.

இந்நாளில் பரந்தாமனிடமிருந்து வெளிப்படும் சக்தி அலைகள் இவ்வுலகம் முழுவதும் பரவியிருக்குமாம். ஆகையால் அந்நாளில் விரதமிருந்து அனந்தனை வழிபட்டால் அந்தச் சூட்சுமச் சக்தி அலைகள் நம்மில் இரண்டறக் கலக்கும் என்பது நம்பிக்கை. 

சூதில் தோற்ற பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து பலவித இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது, மேலும் அவர்களுக்கு இன்னல்களை விளைவிக்க நினைத்து துரியோதனன் துர்வாச மகரிஷியை அனுப்பி வைத்தான். கோப முனியான துர்வாசரிடம் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு கிருஷ்ணர் அவ்விடம் வந்தார். அப்பொழுது தருமர், கிருஷ்ண பரமாத்மாவிடம் நீ அருகில் இருக்கும் பொழுது இவ்வாறு இன்னல்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம், தாங்களும் எங்களை கைவிட்டால் வேறு யார் எங்களை காப்பாற்றுவார் என வேண்ட, ஸ்ரீ கிருஷ்ணர், "நான் இந்த உலகம் முழுவதும் வ்யாபித்து இருக்கும் அனந்தன்! மும்மூர்த்திகள், 14 உலகங்கள், சூரிய, சந்திரர்கள், நக்ஷத்திர மண்டலம், தேவர்கள், கோள்கள், இரவு, பகல், நாள், வாரம், மாதம், வருடம், நதிகள், மலைகள், அணுக்கள், எல்லாமும் நானே! இவ்வாறு அனந்தனாக பாவித்து என்னை பூஜித்தால் உங்கள் இன்னல் தீர்ந்து வேண்டுவன கிடைக்கும். அதன்படி பாண்டவர்கள் ஸ்ரீ அனந்த விரதம் இருந்து கீர்த்தி பெற்றனர்.
 
க்ருத யுகத்தில் வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்த சுமந்தன் கவுதமி தம்பதியருக்கு புதல்வியாக சுசீலை பிறந்தாள். கௌடிண்யர் என்ற வேதம் பயின்ற அந்தணரோடு திருமணம் நடந்தது. கௌடிண்யர் மிக அற்ப ஆயுள் உள்ளவனாக இருந்தான். சுசீலாவின் மாற்றான் தாயின் கொடுமையில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி பல இன்னல்களை அனுபவித்து இந்த அனந்த விரதத்தை மேற்கொண்டு இப்புண்ணிய வ்ரதத்தினால் நீண்ட ஆயுளையும், இழந்த அனைத்தையும் பெற்று முக்தி அடைந்தாள். இப்புண்ணிய சரிதம் ஸ்ரீ குரு சரித்திரம் என்னும் நூலில் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.
ஓம் நமோ நாராயணா !




Friday, August 28, 2020

ஸ்ரீ வாமன ஜெயந்தி - 30-08-2020


ஸ்ரீமன் நாராயணனின் 5 ஆவது திருஅவதாரம்.

விவஸ்வானுடைய புத்திரன் சிராத்த தேவன் ஏழாவது மனுவாக இருக்கிறார். இந்த மன்வந்த்ரத்தில், ஸ்ரீமன் நாராயணர் கஸ்யபருடைய கடைசி புத்திரராக பாத்ரபத மாதத்திய சுக்ல பக்ஷ த்வாதசி திதியும், ச்ரவண நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் அபிஜித் என்ற ச்ரவணத்தின் முதல் பாக நக்ஷத்திரத்தில் அதிதி மற்றும் கஸ்யபர் தம்பதிக்கு பயோ விரதத்தின் பலனாய் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையுடன் பகவான் வாமனர் (குள்ளமான) கருப்பு நிற தேகத்துடனும், மஞ்சள் நிற ஆடையுடனும் அவதாரம் புரிந்தார். மார்பில் ஸ்ரீவத்ச அடையாளம் இருந்ததது.

இந்திரனின் பெற்றோர் கஸ்யபர்-அதிதி. ஆதலால் வாமனர் இந்திரனுக்கு சகோதரன் முறையாவார்.

ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரத்தில் முழுமையான பிராம்மண அவதாரம் வாமன அவதாரம்தான். (பரசுராமர் அந்தணர் குலத்தில் பிறந்தாலும் 21  க்ஷத்ரிய வம்சத்து அரசர்களை அழித்ததனால் நிறைவான பிராம்மண அவதாரமாக நம் நினைவில் இருப்பதில்லை).

இவர் பிறப்பின் பொழுது அநேக சுப சகுனங்கள் தோன்றின.

வாமனருக்கு உபநயனம் செய்யும் பொழுது, சூரிய தேவன் காயத்ரி மந்திரம் உபதேசித்தார். தேவ குரு பிரஹஸ்பதி யக்னோபவீதம் (பூணுல்) அணிவித்தார். கஸ்யபர் மேகலையையும் (ப்ரஹ்மச்சாரி இடையில் அணியும் முப்புரி கயிறு), பூமி க்ருஷ்ணாஜினத்தையும் (கருப்பு மானின் தோல்), சந்திரன் தண்டத்தையும், மாதாவான அதிதி கௌபீனத்தை மறைக்கக்கூடிய வஸ்திரத்தையும், த்யுலோகமானது குடையையும், பிரம்மா கமண்டலத்தையும், சப்தரிஷிகள் தர்பைகளையும், சரஸ்வதி ஜபமாலையையும், குபேரன் பிக்ஷ பாத்திரத்தையும், உமாதேவி முதல் பிக்ஷை அளித்தாள். அபார பிரம்ம தேஜஸுடன் திகழ்ந்தார். அதனால்தான் அந்தணர் இல்லங்களில் பூணுல் போடுவது தள்ளிப்போனால் ஸ்ரீ வாமன மூர்த்தியை நினைத்தால் உடனே நடைபெறும் என்பது நிதர்சனமான  உண்மை.


பகவான் வாமனரின் கால் விரலிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீரை சிவ பெருமான் தனது சிரம் மீது தாங்கி கொண்டார். அப்பேற்பட்ட மகிமை பொருந்திய அவதாரம் ஸ்ரீ வாமன அவதாரம்.

ப்ரஹ்லாதனின் பேரனான மஹாபலி சக்ரவர்த்தியின் விஸ்வஜித் என்ற மஹாயாகத்தை ப்ருகு குல அந்தணர்கள் மிகவும் விமர்சையாக நடத்தினார்கள். 

100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான் மஹாபலி. அவ்வாறு அவன் யாகம் செய்து முடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

பகவத் சங்கல்பத்தின்படி அடுத்த மன்வந்தரத்தில்தான் மஹாபலிக்கு இந்திர பதவி. ஆனால் பலி பகவத் சங்கல்பத்தை மீறி சற்று ஆணவ மிகுதியால் நடப்பதை கண்டு மனம் பொறுக்காத ஸ்ரீமன் நாராயணர் அவனது ஆணவத்தை அடக்க வாமனராக சென்றார்.

மஹாபலி நம் நினைப்பது போன்று சாதாரண அசுரன் அல்ல. பகவான் ஸ்ரீ மன் நாராயணனே நேரிடையாக சென்று யாசகம் கேட்டாரென்றால் அவனது கீர்த்தி நமக்கு விளங்கும்.

மஹாபலியின் தனி சிறப்புகள் சில:-

- மஹாபலி சப்த சிரஞ்சீவிகளில் ஒருவன். 

- ப்ரஹ்லாதனின் பேரன்.

- அடுத்த மன்வந்த்ரத்தில் இந்திர பதவிக்கு வருபவன்.

- இவனின் பாதாள லோகத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு வாயில் காப்பானாக இருந்து பாதுகாத்து வருகிறார்.

- இவனின் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

- பகவானாகிய புருஷோத்தமனாகிய நாராயணனுக்கே யாசகம் கொடுத்த கீர்த்திமான்.

- கற்பக வ்ருக்ஷத்தைவிட அள்ளி கொடுக்கும் கொடையாளி.

- எப்படி இவனின் பாதாள லோகத்தில் ஸ்ரீமன் நாராயணன் வாயில் காப்பாளனாக  உள்ளாரோ, அதேபோல் இவனின் 100 புதல்வர்களில் ஒருவனான பாணாசுரனின் சோணிதபுரத்தில் சிவபெருமான் வாயில் காப்பாளனாக உள்ளார்.

பகவான் ஸ்ரீ மன் நாராயணனிற்கு 1000 நாமங்கள் இருந்தாலும் பின்வரும் 24 திருநாமங்கள் ஜபிப்பது மிகவும் புண்ணியம் தரும். அதில் 13 மற்றும் 15 ஆம் திருநாமங்கள் முறையே ஓம் த்ரிவிக்ரமாய நம மற்றும் ஓம் வாமனாய நம என்பது ஸாக்ஷத் ஸ்ரீ வாமன மூர்த்தியை குறிப்பிடுகின்றன என்றால் இதன் மகத்துவம் நமக்கு நன்கு விளங்கும்.
மஹாபலி வாமனரின் திவ்ய தேஜஸினால் உந்தப்பட்டு அவரை முறைப்படி வரவேற்று, தங்களின் வருகையால் தனது வம்சமும், நாடும் அனைத்து மக்களும் புனிதமடைந்தோம் மற்றும் தங்களின் விருப்பம் ஏதுவாகினும் அதனை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியும் அளித்தான். 

வாமனர் இதுதான் சமயம் என்றெண்ணி மகாபலியின் மூதாதையர் மற்றும் அவனது வம்சத்தின் சிறப்பையும் கூறி அவனிடம் மூன்றடி நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதால் வேறு ஏதாகினும் உயர்ந்த ஒன்றை தானமாக அளிப்பதாக கூற, வாமனர் தனக்கு மூன்றடி நிலம் போதுமானது என்று கூற, மஹாபலி வேறு வழியின்றி தருவதாக ஒத்துக்கொண்டார். அசுரர் குருவாகிய சுக்கிராச்சார்யர் வந்திருப்பது ஸாக்ஷத் ஸ்ரீமன் நாராயணன் அவசரப்பட்டு வாக்கு அளித்து விடாதே என்று கூறினார். மஹாபலி பகவான் நாராயணனே யாசகம் கேட்டால் எப்படி தர மறுப்பது என்று தூய பாகவத எண்ணத்துடன் தானம் அளிக்க தயாரானான். தனது முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் ஆகாசத்தையும், மூன்றாவது அடிக்கு இடமின்மையால் மஹாபலி தனது ஆணவம் அழிந்து தனது சிரத்தின்மீது பகவானின் திருப்பாதத்தை வைக்குமாறு வேண்டினான். வாமனர் தனது புனித திருவடியை மகாபலியின் சிரத்தின் மீது வைத்து அவனை பூமியில் அழுத்தி பாதாள லோகத்திற்கு சக்ரவர்தியாக்கி அனுக்கிரஹம் புரிந்தார். என்னே நாராயணரின் காருண்யம். இதனை கண்ணுற்ற தனது பரம பக்தனும் மஹாபலியின் தாத்தாவுமாகிய ப்ரஹ்லாதரை பார்த்து பகவான், சுதலலோகம் சென்று உன்னுடைய பேரனுடன் சந்தோஷமாக வசிப்பாயாக என்றதும், ப்ரஹ்லாதர் பகவானை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து விடைபெற்று சுதல லோகம் சென்றார்.

வாமனர் பலியிடமிருந்து பூமியை யாசித்து, மூவுலகத்தையும் தனது சகோதரனாகிய இந்திரனுக்கு கொடுத்து அவனுடைய இந்திர லோகத்தையும் மஹாபலியிடமிருந்து மீட்டார். 

இதில் என்னவொரு விந்தை என்றால் ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரத்தில், வராஹம், நரஸிம்ஹம், வாமன, ராம, கிருஷ்ண அவதாரங்கள் ப்ரஹ்லாத/மஹாபலியுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எப்படி என்று பார்த்தால் நமக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கும்.

வராஹம் - இரண்யாக்ஷன் வதம் - ப்ரஹ்லாதரின் சிறிய தந்தை.

நரஸிம்ஹம் - இரண்யகசிபு வதம் - ப்ரஹ்லாதரின் தந்தை.

வாமனர் - மஹாபலி கர்வ பங்கம் - ப்ரஹ்லாதரின் பேரன்.

ராமர் - இந்த ப்ரஹ்லாதர் கலியுகத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக திருஅவதாரம் புரிந்து மத்வ பீடத்தை அலங்கரித்து மூல ராம பூஜை செய்து தனது ஹரிபக்தியை நிலைநாட்டினார். 

கிருஷ்ண - பாணாசுர கர்வ பங்கம் - பலிச்சக்ரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன், பெரும் சிவபக்தன்.

வேறு எந்த வம்சத்திற்கும் கிடைக்காத இவ்வரிய நிகழ்வு ப்ரஹலாத வம்சத்திற்கு கிடைத்தது. அதனால்தான் கீதையில் கிருஷ்ணன், அசுரர்களில் நான் ப்ரஹ்லாதன் என்கிறார்.

ஜலமத்யே வராஹம் ச பார்வதி ரகுநந்தனம் !

கமனே வாமனம் சைவ ஸர்வ காலேஷு மாதவம்!!

தாம் அக்ஷீணாம் பலிகிரம் உபாக்ர்ண்ய காருண்ய பூர்ண: அபி அஸ்ய உத்ஸேகம் ச மயிதுமனா: தைத்யவம்சம் ப்ரசம்ஸன் பூமிம் பாதத்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாம் ஆஸித த்வம் ஸர்வம் தேஹீதி து நிகதிதே கஸ்ய ஹாஸ்யம் நவாஸ்யாத் - நாராயணீயம் தசகம் (31-2)

இப்புண்ணிய சரிதம் கேட்பதும் படிப்பதும் பரம விசேஷம். தேவ, பித்ரு காரியங்கள், ஏகாதசி நடைபெறும் சமயத்தில் படித்தால் மஹா மஹா புண்ணியம்.