Saturday, September 5, 2020

அத்ரி அனுசுயா மஹாத்மியம்


முதன் முதலில் ப்ரளய நீரில் யாவும் மூழ்கியிருந்த போது பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்கு மீண்டும் உலகை சிருஷ்டிக்கும் எண்ணம் உருவாயிற்று. அவ்வெண்ணம் ஒரு ஹிரண்ய கர்ப்பமாக (பொன் முட்டை) உருவானது. 

தேவர்களின் ஓராண்டு கழிந்த பின் (மனிதர்களின் ஓராண்டு=தேவர்களின் ஒரு நாள்), ஹிரண்ய கர்ப்பம் இரண்டாக பிளந்து பூமியும், ஆகாயமும் உருவானது.

ப்ரஹ்மதேவன் ஸ்ரீ விஷ்ணுவின் நாபி கமலத்தில் இருந்து ஆவிர்பவித்தார். இவர் 14 லோகங்களையும்,10 திசைகளையும், மனது, காலம், காமம், க்ரோதங்களையும் தோற்றுவித்தார்.

பிரம்மா தன் மனதிலிருந்து, ஏழு மானஸ புத்திரர்களான மரீசி, அத்ரி, ஆங்கீரஸர், புலஸ்தியர், புலஹர், க்ருது, வஸிஷ்டர் தோற்றுவித்தார். பிறகு தனது இடப்பக்கமிருந்து சதரூபம் என்ற பெண்ணையும், வலது பக்கமிருந்து ஸ்வயம்புவ என்ற மனிதனையும் உண்டாக்கினார். அவர்களுக்கு தேவஹூதி என்ற பெண் பிறந்தாள். இந்த தேவஹூதி கர்தமர் என்ற ப்ரஜாபதிக்கு  மனம் முடித்தனர். அவர்களுக்கு 9 பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவரான அனுசூயாவை அத்ரி மகரிஷி திருமணம் புரிந்தார். 

அத்ரி சப்த மஹரிஷிகளில் ஒருவர். இவரின் சிஷ்யர் புகழ் பெற்ற கோரக்க சித்தர். அத்ரி மஹரிஷியால்தான் இப்புண்ணிய பூமியில் சனாதன தர்மங்களும், யாகங்களும், வேதங்களும், யோகா சாஸ்திரங்களும், குரு பரம்பரையும் வந்தது.

இந்த அத்ரி மஹரிஷியிடமிருந்துதான் குருவின் மூல பீடம் ஆரம்பம்.

ப்ரபஞ்சத்திற்கே ஒளி கொடுத்து ப்ரத்யக்ஷ தேவதையாய் திகழும் சூரிய பகவானிற்கு தன்னுடய அபார தவத்தினால் இழந்த ஒளியை மீண்டும் மீட்டுக்கொடுத்த அபார கீர்த்தி மிக்கவர் அத்ரி மகரிஷி. அவருடைய பல தேவ வருட தவத்தின் சக்தி ஓர் ஜோதியாக உருவெடுத்து அந்த ஜோதியை தன்னுடைய கரங்களினால் ப்ரஹ்ம தேவர் ஏற்று அதை வானில் இருக்க செய்தார். அதுவே சந்திரன் ஆகும். நாம் செய்யும் அனைத்திற்கும் காரண சாட்சியாக ப்ரத்யக்ஷ தேவதையாய் இருந்து அருளும் சூரிய சந்திரர்களை தந்த பெருமை அத்ரி மகரிஷி ஒருவரையே சாரும்.

இவரின் வம்ச வழிகளில் வந்தவர்கள் ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவர்கள். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.

அத்ரி மஹரிஷி ஜோதிடம், ஆயுர்வேதம், வைத்திய சாஸ்திரங்களில் நிபுணர்.

பதிவ்ரதைகளில் ப்ராதான்யமாக (முதன்மையாக) விளங்குபவள் அனுசுயா மாதா. வனவாசத்தின் போது சித்திர கூடத்தில் லோக மாதவான சீதா தேவிக்கே பதிவிரதா தர்மத்தை உபதேசம் பண்ணிய கீர்த்தி மிக்க கற்புக்கரசி. தான் அணிந்திருந்த ஆபரணங்களை சீதைக்கு அணிவித்து அழகு பார்த்தவள். ராமர் வனவாசத்தின் போது தனது முதல் காலடி பட்ட இடம் அனுசுயா மாதா குடில்தான். லவலேசமும் அசூயை இல்லாதவளானதால் அனுசுயா என அழைக்கப்பட்டாள். அபார தேஜஸுடன் கோடி சூர்ய ப்ரபாவத்துடன் மிக்க அழகு உடையவளாக விளங்கினாள். ஆனானப்பட்ட மன்மதனே அனுசுயா மாதவிடம் இருந்து விலகியே இருப்பான். அப்பேற்பட்ட பதிவிரதா சிரோன்மணி.

ஸ்ரீ தத்தாத்ரேயரின் அன்னை. இந்த தெய்வத்தம்பதிகளின் மற்றொரு மகன் ஸ்ரீ பதஞ்சலி முனிவர். இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவர்”. ஆதிசேஷனின் அவதாரமாகத் தோன்றியவர். யோகா சூத்திரத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.

அனைத்தும் இவளின் பதிவிரதா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்த இந்திரன் மும்மூர்திகளிடம் சென்று, அனுசூயாவின் இடைவிடாத பதிசேவையினால் அனுசூயாவின் பதிவிரதா தர்மத்தின் சக்தியால் பஞ்ச பூதங்களும், சகல தேவதைகளும், சகல லோகங்களும், ஏன் கொடிய பிராணிகளும் கட்டுப்பட்டு இருந்தன. இதனால் எனது பதவி பறி போகும் அபாயம் உள்ளது என்றும் முறையிட்டான்.

இதனை கேட்ட மும்மூர்த்திகள் வியப்படைந்தனர். அனுசூயாவின் பதிவிரதா தர்மத்தை சோதிக்க மூவரும் தவ வேடமிட்ட அந்தணர் போன்று அவளின் வீட்டிற்கு சென்று தங்கள் மிகவும் பசியாக இருப்பதாகவும் உடனே உணவு அளிக்கும் படியும் கூறினர். அச்சமயம் அத்ரி மகரிஷி அனுஷ்டானத்திற்காக வெளியே சென்றிருந்தார். அம்மூர்த்திகள் தங்களுக்கு இச்சா போஜனம் (தங்கள் ஆசைப்பட்டு கேட்கும் ஆகாரம்) அளிக்கும்படி கூறினர். வந்த அதிதிக்கு தக்க மரியாதை செய்து இலை போட்டு தத்தமது ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொண்டாள்.  உடனே அவ்வந்தணர்கள் மூவரும் தாங்கள் வெகு தூரத்திலிருந்து உன்னுடைய ரூபலாவண்யத்தை காண வந்திருப்பதாகவும், ஆடைகள் அற்ற நக்னமாய் தங்களுக்கு பரிமாறும்படியும் கூறினர். உடனே அனுசுயா சற்று சிந்தித்து, இவர்கள் சாதாரமானவர்கள் அல்லர். இம்மூவுலகத்தில் என்னிடம் இப்படி கேட்கும் தைர்யம் உடையவர்கள் மும்மூர்த்திகள் மட்டுமே. ஏதுவாகினும், வந்திருக்கும் அதிதிகள் நிராசையாக கூடாது என்ற உயர்ந்த நோக்கில், என்னுடைய சித்தம் நிர்மலமாக இருந்தால் என்னுடைய பதியின் தவம் பலமாயிருந்தால், என்னுடைய பதிவிரதா தர்மம் உண்மையானதாக இருந்தால் இவர்கள் மூவரும் இந்த க்ஷணம் குழந்தையாக மாறகடவது என்று நினைத்து வேண்ட மும்மூர்த்திகளும் சிசுவாக மாறினார். சற்று சிந்தியுங்கள் எப்பேர்ப்பட்ட பதிவ்ரதத்வம்.

உடனே தாய்மை உணர்வு மேலோங்க அக்குழந்தைகளுக்கு ஸ்தன்யபானம் செய்வித்தாள். இவ்வுலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒரே பாக்கியம் ஸ்ரீ அனுசுயா மாதாவிற்கு கிடைத்தது. அவளின் பதிவிரதா தர்மத்தை உலகிற்கு உணர்த்த மும்மூர்த்திகளின் திருவிளையாடல். சகல லோகங்களையும் அடக்கி ஆளும் விஷ்ணு, சகல லோகங்களையும் படைத்த பிரம்மா, நொடிப்பொழுதில் அண்ட சராசரங்களையும் அழிக்கும் பேராற்றல் படைத்த ருத்ரன் இம்மூவரும் அனுசுயா மாதாவின் ஸ்தன்யபானத்தில் த்ருப்தியடைந்து பசி தீர்ந்து உறங்கிப்போயினர். முப்பது முக்கோடி தேவர்களும், முப்பெரும் தேவியரும், சகல தேவதா மூர்த்தங்களும், சகல ஜீவராசிகளும் இவ்வரிய காட்சியை மலர் மாலை பொழிந்து வாழ்த்தினர்.

அத்ரி மகரிஷி தனது அனுஷ்டங்களை முடித்து திரும்பி வருகையில் நடந்த அனைத்தையும் தனது ஞான திருஷ்டியில் அறிந்து தனது மனைவியின் கீர்த்தியை கண்டு பெருமிதம் அடைந்தார். அத்ரி - அனுசுயா தம்பதிகள் மும்மூர்த்திகளை வணங்கினர். மூவரும் பிரசன்னமாகி, தாங்கள் கேட்கும் வரம் ஏதுவாகினும் தர சித்தமாக உள்ளோம் என்று கூற, அனுசுயா தாங்கள் என்னுடைய ஸ்தன்யபானம் பருகியதால் என் புத்திரர்களாக இருக்க வேண்டும் என்றாள். ‘ததாஸ்தும்’ என்று வரம் நல்கினர். மும்மூர்த்திகளின் அன்னை என்ற சிறப்பு பெற்ற ஒரே பெண்மணி நமது புண்ணிய பூமியில் அனுசுயா மாதா மட்டும்தான்.

ப்ரஹ்மதேவனின் அம்சமான சந்திரன், விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேயன் , சிவனின் அம்சமான துர்வாசன் என்று தங்களின் மூன்று அம்ச சக்திகளை அனுசூயாவிடம் அளித்தனர். இவர்களில் சந்திரனும், துர்வாசரும் தாயை நமஸ்கரித்து தவத்திற்கு செல்ல அனுமதி கோரினர். துர்வாசர் ரிஷி ஆனதால் தீர்த்த யாத்திரை செய்து தவம் செய்யவும், சந்திரன் தன்னுடைய லோகம் சென்று தன் தாயின் பாதங்களை தரிசித்து கொண்டிருக்கவும் விடை பெற்று சென்றனர். மூன்றாவது புத்திரன் விஷ்ணு மூர்த்தியான ஸ்ரீ தத்தாத்ரேயர்  அவர்களுடன் தங்கினார். "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" என்ற வாக்கின்படி மூன்றுபேரும் சேர்ந்த தத்த மூர்த்தி குரு பீடத்திற்கு மூல புருஷராக விளங்கினார்.

குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.
ஒரு சமயம் வானம் பொய்த்து எங்கும் பஞ்சம், பசி, வறுமை சூழ்ந்தது. மக்களின் இந்த நிலையை எண்ணி மனம் பொறுக்காமல் தன்னுடய தபோபலம் மற்றும் பதிவிரதா தர்மத்தின் சக்தியினால் கங்கையை பூமிக்கு வரவழைத்து இப்புண்ணிய பூமியை மீட்டவள். பிறிதொரு சமயம் தன்னுடைய உயிர்த்தோழி விதி வசத்தால் ஒரு முனிவரின் சாபத்திற்கு ஆளாகி சூரியன் உதிக்கும் பொழுது அவள் விதவை ஆவாள் என்று அம்முனிவர் சாபமிட்ட தன்னுடைய தோழியின் பரிதாப நிலையை கண்டு, மனம் இறங்கி சூரியனையே உதிக்க விடாமல் செய்த மகா பதிவ்ரதையான பராசக்தி அனுசுயா மாதா.

அத்ரி அனுசுயா சாக்ஷாத் பார்வதி பரமேஸ்வரரின் அம்சா சக்திகள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆழ்வார் குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரி மலை அமைந்துள்ளது. இங்கு அத்ரி-அனுசுயா தேவி வாழ்வதாக ஐதீகம்.

அத்ரி மகரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா யோகாய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்.



10 comments:

  1. தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்.. அறியாத ஒன்றை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. The details narrated are very helpful in kindling many memories. Athiri Hill near Ambasamuthram is now turning into a new peaceful retreat for many on weekends. The deed of unification of the three godheads is embodiment of unity of the Supreme being and in Sucheendram we use to worship the combined moorthy as Sthanumalayan. The name itself is denoting the merger of Shiva, Vishnu and Bhrama. Thanks🌹

    ReplyDelete
  4. தங்களது அத்ரி அனுசுயா மஹாத்மிய ஆன்மீக பதிவு படித்தேன் அருமை மிகவும் அருமை சப்தமஹரிஷிகளில் ஒருவரான இவர் மூலம் தான் குருவின் மூலபீடம் ஆரம்பம் என்றும் ஓளியிழந்த சூரியனுக்கு மீண்டும் ஓளிவழங்கச்செய்த மகாகீர்த்தி பெற்றவர் எனவும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஜோதிடம் ஆயுர்வேதம் மற்றும் வைத்தியசாஸ்திரங்களில் மஹா நிபுணர் என்றும் தெரிந்துகொண்டேன் இவரின் பத்னி‌மகாபதிவிரதை அனுசுயா‌பதிவரதாதர்மத்தின் வாயிலாக முப்பெரும் தெய்வங்களான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோருக்கு தாயாக இருக்கக்கூடிய பேறுபெற்றவள் ஆகிறாள் என்று அம்மாதரசியின் வாழ்க்கையையும் அவரின் பெருமையையும் சீராகவிளக்கியுள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி புதிய தகவல்களுடன் அடுத்த ஆன்மீக பூவினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Thanks for the very good presentation on one of the Saptharishis and his pathni who brought the Trinity to earth and also gave mankind the 'Athiguru Dhattathreya and Yogaguru Patanjali.

    ReplyDelete
  6. பரம்பொருளான நாராயணன் அருளால் உலகை சிருஷ்டிக்கும் எண்ணம் பிரம்ம தேவருக்கு தோன்றியதையும் அதன் பின்னர் அத்திரி மகரிஷி அனுசுயாதேவி யை திருமணம் செய்து கொண்டதையும் அவர்களின் புதல்வனே ஸ்ரீ தத்தாத்ரேயர் என்பதும் தற்போது தான் தெரியவந்தது மும்மூர்த்திகளும் அனுஷியவின் குழந்தைகளாக அவதரித்தனர் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாகும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிக அருமை. அனுஷியாவின் கதை அற்புதம்.

    ReplyDelete