Thursday, September 10, 2020

மஹாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாள் (11-09-2020)


நமது பாரத நாடு அந்நிய கொள்ளையர்களின் ஆதிக்கத்தில் சிக்கி தவித்த பொழுது, அஹிம்சயினால் மஹாத்மா காந்தியும், ஆயுத போராட்டத்தினால் சுபாஷ் சந்திர போஸும் போராடி கொண்டிருந்த பொழுது, தன்னுடைய கவிதைகளினால் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தினை ஆட்டம் கான வைத்தவர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

அந்த கலைமகளே முண்டாசு மீசையுடன் தோன்றினளோ என்பதற்கேட்ப சிறுவயது முதலே அபார புலமையும் கவிதை புனையும் ஆற்றலுடனும் விளங்கினார். சரஸ்வதிக்கு பாரதி என்றொரு பெயரும் உண்டு. என்னவொரு ஒற்றுமை நமது கற்பனைக்கும்  எட்டாத விந்தை. பாரதி என்றாலே நம்மையும் மீறி ஒரு தேசப்பற்றும், தேசிய உணர்வும் தோன்றுவதென்றால் அது மிகையாகாது. மஹாகவியின் கவிதைகளை படித்தால் கோழைக்கும் வீரம் வரும், மூடனும் மேதாவியாகி கவிதை புனைவான். இவர் ஏற்படுத்திய சுதந்திர தாகம், வேட்கை இன்றும் நம்மால் உணர முடிகிறதென்றால் அது நம் பாரதிக்கு மட்டுமே சாத்தியம்.

பிறப்பு

பாரததாயின் ஒருமகனாய் பராசக்தியின் திருமகனாய் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு 11-12-1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். தன்னுடய சிறு வயதில் அன்னையை இழந்தார்.

கம்பனிற்கு பிறகு தமிழ் மொழியில் ஒரு புரட்சி, மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரே தமிழ் புலவர் மஹாகவி சுப்ரமணிய பாரதி மட்டுமே.

திருமணம்

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பட்டங்கள்

இவரது கவிபாடும் அபார புலமையை அறிந்து எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்னும் பட்டத்தை அளித்தார்.

இவருக்கு மகாகவி என்னும் பட்டத்தை அளித்தவர் வ. ராமசாமி ஐயங்கார்.

ஆசிரியர் பணி

சுதேச மித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும் மற்றும் இந்தியா  என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து இது தவிர மற்ற பல பத்திரிகைகளிலும் பணியாற்றி ஓய்வின்றி நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்.

சுப்ரமணிய பாரதியார் நடத்திய இந்தியா பத்திரிகையில் 1907 சித்திரை 1 தமிழ் வருட பிறப்பு அன்று வெளியான கருத்துப்படம்.

எழுத்துப்பணி

பாப்பா பாட்டு, கண்ணன் பட்டு, குயில் பட்டு, புதிய ஆத்திச்சூடி, பகவத் கீதையின் உரை, தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம் என்ற அழியா புகழ் பெற்ற பல காவியங்களை படைத்தார். பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதினர். பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்.

இவரின் கவிதைகளினால் ஈர்க்கப்பட்டு கனகசபை சுப்புரத்தினம் என்பவர் தன்னுடைய பெயரை “பாரதிதாசன்” என்று மாற்றி பின்னாளில் “பாவேந்தர் பாரதிதாசன்” என்று புகழ் பெற்றார்.

இவரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி ஐயர்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

நண்பர்கள்

பாலகங்காதர திலகர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அரவிந்தர், சுப்ரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர் இவரின் உற்ற நண்பர்கள்.

விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா இவரின் ஆன்மீக குரு.

மொழிப்புலமை

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், வங்காளம் ஆகிய பண்மொழி புலமை பெற்றிருந்தார்.

கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவி இவர்.

சமூக சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் நிலவும் அசாதரணமான உணர்திறன் மிக்க விஷயங்களான தீண்டாமை, பெண்ணடிமை, பெண்ணியம், மூட நம்பிக்கைகளை அன்றே (100 ஆண்டுகளுக்கு முன்பே) சாடி சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்திய வீர தமிழன் எங்கள் பாரதி.

“வந்தே மாதரம்” என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.

ஆத்திகம், பகுத்தறிவு, தீண்டாமை, பெண்ணியம், மூட நம்பிக்கை என அனைத்திலும் முத்திரை பதித்து மக்கள் மனதில் அமரகவியாக சிம்மாசனம் ஏற்று வீற்று இருப்பதினால் "மஹாகவி", "தேசியக்கவி", "முண்டாசுக்கவி" என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

அந்நாளிலேயே தனக்கென்று ஓர் அடையாளத்தி ஏற்படுத்தி, முண்டாசுடனும், முறுக்கு மீசையுடனும் கம்பீரமான தோற்றத்துடன் விளங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய முதல் கவி இவர் ஒருவர் தான்.


இவரின் அமரத்துவம் வாய்ந்த வரிகள்

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்”

“ரௌத்திரம் பழகு”!!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

“தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

“காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்”

இந்திய சுதந்திரம் மட்டுமில்லாதது பெண் சுதந்திரத்திற்காகவும்  போராடியவர். இன்றும் பல புதுமை பெண்களுக்கு மஹாகவி பாரதிதான் முன்னோடி.  ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று அன்றே முழங்கிய தீர்க்கதரிசி.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!”

“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே”

என்னவொரு வீறுகொண்ட வரிகள். முதன் முதலில் பெண் விடுதலைக்கும்,  மூட நம்பிக்கைக்கும் போராடிய சிறந்த போராளி இவரை விட இந்நாட்டினில் இல்லை.

தீண்டாமைக்கு எதிராக முதலில் தனது பாடல்கள் மூலம் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”.

புரட்சிகரமான கவிதைகளினால் மட்டுமில்லாமல் மென்மையாக கவிதை புனைவதில் இவருக்கு நிகர் இவ்வுலகினில் இல்லை. இன்று பெரும்பாலான கவிஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இவரின் பாடலை தொடாமல் மேற்கோள் காட்டாமல் எழுதுவது சாத்தியமில்லை.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!

“நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ”!

“காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே”!

பெண்ணியத்திற்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் தன்னுடைய பாடலின் மூலம் அறிவுரை வழங்குவதில் பாரதிக்கு நிகர் எவரும் இல்லை.

ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

ஆஹா என்னவொரு ஆழ்ந்த சொற்சுவை, பொருள் சுவை.

கைது

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறி  பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார்.

வரலாற்று சந்திப்பு

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகாகவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

மறைவு 

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

நினைவிடம்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்ணியத்தின் கண்ணியம் காத்தவன்
தேசியத்தின் தேகம் காத்தவன்
பாடல்களினால் பாரதம் காத்தவன்
ஆங்கிலேயர்களை ஆட்டம் கான வைத்தவன்
தீண்டாமையை திட்டி தீர்த்தவன்
மூடநம்பிக்கையை முட்டி தள்ளியவன்
சாதியை சாடியவன்
கண்ணனுடன் கலந்துரையாடியவன்
குயில் காக்கைகளுடன் கீதம் இசைத்தவன்
காணும் இடமெல்லாம் பராசக்தியை கண்டவன்
வறுமை வாட்டியபோதும் வற்றாத வளமையுடன் கவிதை பாடியவன்
தமிழ்த்தாயின் தலைமகன் எங்கள் பார(தீ) !!!!!!

“வந்தே மாதரம்”


7 comments:

  1. அருமை ஐயா. நமது மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ளது. இவ்வையகம் உள்ள வரை நமது தேசியக்கவியின் புகழ் வாழும்

    ReplyDelete
  2. On the day of remembrance of the great desiya kavi,an excellent narration of his lifestory. Thanks. Go ahead on presenting such wonderful information.

    ReplyDelete
  3. காலத்தால் அழியாத, கவிஞரை நினைவு கூர்ந்து, நல்ல பல தகவல்களை,நயமாக
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாளை ஒட்டிய தங்களின் பதிவு மிகவும் அருமையான படைப்பு பாரதியின் படைப்புகள் ஆங்கிலம் ஸ்பானிஷ் ரஷ்ய ஆர்மீனியன் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது இத்தருணம் நினைவுகூறத்தக்கது பிரும்மசூத்திரம் பகவத்கீதைஉபநிஷத்துக்களைசம்ஸ்கிதத்தின்ஆதாரங்கள்என்றபோது கம்பன் இளங்கோ வள்ளுவன் போன்றோரை தமிழின் ஆதாரங்கள் என்றவர் பாரதி கற்பனை நிலையிலிருந்து மாறி அறிவியல் வரலாறு அறிந்த கவி ஆன்மீக வாதியாக இருந்த போதும் பெண்ணியம் ஜாதிஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற‌கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றியவர் தனக்கான கோரிக்கைகளை பாடலாக பட்டியல் இட்டு இவற்றை நீஎனக்கு கொடுக்க்கடமைப்பட்டவன் என் கடவுள் கணபதிக்கு கட்டளையிட்டமுதல் தமிழ் கவிஞர் பாரதி திவேதிதையை குருவாக ஏற்றவர் பாரதி சுதந்திரம் என்பதில் புரியலை என்று கர்ஜித்த லோகமான்யபாலகங்காதரதிலகரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் மகாகவி பாரதியாரின்100வது நினைவுநாளில் அவரை வணங்குவோம் இந்நாளில் வெளிவந்த தங்களின் கட்டுரை அருமைமிக அருமை உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. A nice birds eye view of Mahakavi Bharathy. You have touched most of the multifaceted personality of him. He motivated millions of youth not only in the South but through out our nation through translation. He was an original thinker who was born far ahead of his time. His clarion call for eradication of casteism and for emancipation of women with education together with his angst for freedom, to wit every bit of his life is memorable and adorable. Thanks.

    ReplyDelete
  6. அருமை. மதுரை என் சகோதரப்பள்ளி சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ளது. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. கம்பனுக்கு பின் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியை தெரியாதவர் யார் உளர் மொழிப்பற்று நாட்டுப்பற்று ஆன்மீக அறிவு எளிய இனிய கவிதை புனையும் ஆற்றல் சாதி மத வேறுபாடுகளைக் களைய சாதிகள் இல்லையடி பாப்பா என்ற அவரது எளிய பாடல்களை சின்ன வயதில் படித்தது இன்றும் மறக்க இயலாதவை வீரம் நிறைந்த அவரது வாழ்வை சொல்லி சொல்லி மகிழலாம் மறக்க இயலாத மாமனிதர் வாழ்க அவர் புகழ

    ReplyDelete