Saturday, June 6, 2020

மாவீரன் சாத்யகி



🏹⚔️ சாத்யகி மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். பெரும்பாலும் பலர் அறிந்திடாத மற்றும் அறிந்துக்கொள்ள கூடிய மாவீரன். யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன் கண்ணனின் குலமான யாதவ குலத்தின் விருஷ்ணி பிரிவை சார்ந்த வீரனாவான். சாத்யகி சினி என்பவரின் பேரனும் சாத்யாகரின் மகனும் ஆவார். கிருஷ்ணன் சாத்யகிக்கு மாமன் முறையாகும். கிருஷ்ணரும், பலராமனும் விருஷ்ணி பிரிவையை சேர்ந்தவர்களே. கிருஷ்ணனின் உற்ற நண்பரும் ஆவார். சாத்யகி, கண்ணனிடமும், அர்ஜுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான்.


🏹⚔️ யாதவ குலத்தில் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. அதில் ஹைஹேயர்கள் யாதவ குலத்தில் உயர் பிரிவை சேர்ந்தவர்களாகவும் மற்ற யாதவ குல பிரிவுகளான சேதர்கள், விதர்ப்பர்கள், அந்தகர்கள், குகுரர்கள், போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள்.


🏹⚔️ சாத்யகி துரோணரிடமும் அர்ஜுனனிடமும் வில் வித்தையை கற்றவர்.  இருப்பினும் அர்ஜுனனையே தன் மானசீக குரு என பல இடங்களில் முன்னிருத்தி கூறியிருப்பான் (குறிப்பாக சுபத்திரை திருமணத்தின் போது)



🏹⚔️ பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்யகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்யகியும் உடன் சென்றிருந்தான்.


🏹⚔️ குருஷேத்திர போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்யகியும் கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்யகி பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான். மேலும் குருஷேத்திர போரின் போது கெளரவ சேனையின் அனைத்து வீரர்களையும் தோற்க்கடித்த வீரன் எனும் முத்திரையை ஆழமாக பதித்தவன்.


🏹⚔️ குருஷேத்திர போரில் துரோணரின் வில் நாணை நூற்றியோரு முறை தொடர்ந்து அறுத்து ‘வெல்லமுடியாத சாத்யகி’ என்று துரோணரால் புகழப்பட்டவர். பாண்டவர் தரப்பில் இருந்த மிக சிறந்த வில்லாளிகளில் இவரும் ஒருவர்.


🏹⚔️ சாத்யகியின் தாத்தாவான சினி, வசுதேவருக்காக (கண்ணனின் தந்தை) சுயம்வரத்தில் பங்கேற்று தேவகியை வெல்கிறார். இதை ஏற்காத சோமதத்தர் என்ற மன்னர் சினியை எதிர்க்க சோமதத்தரை தேர்க்காலில்கட்டி அவமதிக்கிறார் சினி. இதற்கு பழிவாங்க சோமதத்தர் தன் மகன் பூரிஸ்சிரவஸ் முலம் சினியின் மகனான சாத்யாகரை அதே முறையில் அவமதிக்கிறார். இதற்கு பழிமுடிக்க தக்க நேரம் பார்த்து காத்திருக்கிரார் சாத்யகி இப்படி இரு குடும்பத்திற்கிடையே குலபகை நெடுங்காலமாய் நிலவுகிறது.


🏹⚔️ பூரிசிரவஸ்  பாஹ்லிக நாட்டு மன்னராவர். சாந்தனுவின் சகோதரன் பாஹ்லிகனின் பேரனும், சோமதத்தனின் மகனும் ஆவன். இவனுக்கு கிருஷ்ணன் மற்றும் சாத்யகியும் பிறவிப் பகைவர்கள் ஆவர்.  குருஷேத்திர போரில், கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர் அணிக்கு எதிராக போரிட்டவன். 5ஆம் போரில் சாத்யகியின் பத்து மகன்களை பூரிசிரவஸ் கொன்றான். 14ஆம் போரில் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான ஜெயத்திரதனை பழி வாங்க வந்த அர்ஜுனனை சக்கர வியுகத்தை உடைக்க இயலாதபடி தடுத்து நிறுத்தினான். பின்னர் சாத்தியகியை கொல்ல வந்த பூரிசிரவசின் ஒரு கையை அருச்சுனன் வெட்டி எறிந்தான். உடன் சாத்யகி பூரிசிரவசின் தலையை தன் வாளால் கொய்தான்.

🏹⚔️ இறுதியாக நடந்த பாரத யுத்தத்தில் சோமதத்தரையும் பூரிஸ்வரசையும் தன் கைகளாலேயே கொன்று குலப்பகையை தீர்த்து கொள்கிறார் சாத்யகி. மேலும் இது மட்டுமல்லாது கெளரவ தரப்பில் இருந்த பீஷ்மரை தவிர அனைத்து மாவீரர்களையும் வென்று தன் வீரத்தை பாரத போரில் பறைசாற்றிய மாவீரன் சாத்யகி ஆவார்.



 🏹⚔️ பாண்டவர்களின் வனவாசத்தின் போது துவாரகையில் வாழ்ந்த அபிமன்யுவிற்கு போர் பயிற்சி அளித்தவர்களில் சாத்யகியும் ஒருவர்.       ஒரு அக்குரோணி சேனையுடன்  குருஷேத்திர போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக போரிட்டார்.  அக்குரோணி என்பது 21,870 தேர்களையும், 21,870 யானைகளையும், 65,610 குதிரைகளையும், 1,09,350 படை வீரர்களையும் உள்ளடக்கியது. பாண்டவ அணியின் எழு படைத்தளபதிகளுள் சாத்யகியும் ஒருவர். 


🏹⚔️ கண்ணன், சாத்யகி மற்றும் பலராமன் மூவரும் அந்திப்பொழுதில் ஒரு வனத்தைக் கடந்து செல்லவேண்டியதாயிற்று. அடர்ந்த வனத்தில்  ஒரு பாழடைந்த மண்டபத்தில் இரவு தங்கிப்போவதே நன்று என நினைத்து தங்கலாயினர். இருவர் தூங்குவது என்றும் ஒருவர் விழித்திருந்து காவல் காப்பது என்றும் ஒரு சாமம் முடிந்தபின்னர் காவல் செய்பபவர் உறங்குபவரில் ஒருவரை எழுப்பி காவலுக்கு அனுப்பிவிட்டு உறங்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.

முதல்  காவல் பொறுப்பு சாத்யகியிடம் விழுந்தது. கையில் ஒரு மரக்கிளையினை ஒடித்து பற்றிக்கொண்டு பாழ்மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான் சாத்யகி. திடீரென மின்னல் தோன்றியது. கார் மேகங்களே இல்லாத போது ஒரு விண்மீன் வானத்தினின்றும் உதிர்ந்து கீழே விழுந்தது. அந்த உதிர்ந்த விண்மீன் தரையைத் தொட்டு வீழ்வதை சாத்யகி பார்த்தான். உன்னிப்பாக இருளின் ஊடே நடக்கும் இந்த நிகழ்வைக் கண்டான். விழுந்த துகள் போன்ற விண்மீன் மனித உருக்கொண்டது. காவல் புரியும் சாத்யகியிடம் வம்பு பேசியது. அவன் ஒரு அசுரன் என்றும் பாழ்மண்டபம் தன் வசமானது என்றும் அங்கு தங்கலாகாது  என்றும் மீறினால் தண்டனை கிடைக்கும் என்றும் உறத்த குரலில் கூறினான்.

சாத்யகியும் பலவான், வீரன் என்பதால் இருவருக்கும் சண்டை மூண்டது. இருவீரர்களும் ஒருவர் மற்றவரை அடித்துத் துன்புறுத்தினர். வீழ்த்த முயன்றனர். இருவரும் பெற்ற குருதி வழியும் காயங்களுடன் இருந்தனர். ஒரு சாமம் முடிந்துவிட்டதால் சற்றே பின்வாங்கி சாத்யகி  பலராமனை எழுப்பி காவல் புரிய விட்டுவிட்டு  உறங்கச்சென்றுவிட்டான். இருளில் மறைந்த அசுரன் மீண்டும் ஒருகாவல்வீரனாக பலராமன் வந்தவுடன் அவனையும் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கினான். துவந்த யுத்தம் மூண்டது.  வனமே அந்தப்பகுதியில் சேதமுறும் அளவில் இருவரும் சளைக்காமல் போரிட்டனர். நேரம் செல்லச் செல்ல அசுரன் உருவத்தில் வளர்ச்சி அடைவதை சாத்யகியைப் போன்று பலராமனும் கவனித்தான். முடிவு காணாத வகையில் யுத்தம் தொடந்து நடந்தது. இரு மல்லர்கள் அடுத்தவரை மாய்த்துவிட பெரிதும் முயன்றனர். ஒரு சாமம் கழிந்தது.

யுத்தம் முடிவடையவில்லை. பலராமன் மண்டபத்தில் கண்ணனை எழுப்பிவிட்டுவிட்டு படுத்துக்கொண்டான். கண்ணன் பாதுகாக்கும் முறையானதால் மண்டபத்தைவிட்டு வெளி வந்ததும் அசுரன் பலத்துடன் கண்ணனைத் தாக்க வந்தான். பெரிய உருவம் படைத்த அசுரன் கண்ணனின் முன்னர் சிறிய உருவம் கொண்ட பொம்மை போன்று ஆகிவிட்டான். அவனை இரு விரல்களால் தூக்கி தன்னுடைய அரைஞாண் கயிற்றில் தொங்கவிட்டான் கண்ணன். அசுரன் கண்ணனின் ஆடைக்குள் பொம்மையாகத் தொங்கிக்கொண்டிருந்தான்.   பொழுது புலர்ந்தது.  கண்ணன் இனிதே மண்டபத்தில் இருந்த பலராமன், சாத்யகி இருவருடனும் உரையாடி எழச்செய்தான். கண்ணனின் திறமையால் அசுரன்  மாய்க்கப்பட்டிருப்பான் என்று சாத்யகியும் பலராமனும் யுத்தம் நிகழ்ந்த இடத்தில் தம் பார்வையைச் செலுத்தினர். கண்ணன் அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்று வினவினான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே கண்களை அகல விழித்து அசுரனின் உடலைத் தேடினர். கண்ணன் அவர்களிடம் “இவனையா தேடுகிறீர்கள்” என்று கேட்டுக்கொண்டே மேலாடையை சற்றே விலக்கி இரு விரல்களால் பொம்மை போன்ற உருவம் கொண்ட அசுரனைத் தூக்கிக் காட்டினான். சடலமாக இருப்பான் என்று எதிர்பார்த்த அசுரன் பொம்மையாகிக் கண்ணனின் இருவிரல்களிடயே கைகளையும் கால்களையும் அசைத்து ஆடிக்கொண்டிருக்கும் அசுரனைக் கண்டு திகைத்தனர். கண்ணன் விளக்கினான். எதிரிகளின் பயம் வளர வளர அந்த அசுரன் வல்லமை பெறுவான். பயமே இல்லாத எதிரியிடம் அவன் பாவையாகிவிடுவான். இதோ இவனைப் பாருங்களேன் என்று ஒரு கல்லின் மேல் அவனை வைத்தான். கண்ணன். செல் என்றதும் அவன் மறைந்து போனான்.

🏹⚔️ சாத்யகி பாணாசுர யுத்தத்தில் கிருஷ்ணரின் சார்பாக சிவ பெருமானின் சேனையுடன் அபார கீர்த்தியுடன் போராடினான்.

🏹⚔️ பாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து அனைத்து யாதவர்களும் பிரபாச கடற்கரைக்கு செல்கின்றனர் (இன்றைய சோம்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள வெராவல் என்னும் இடமே இது). அங்கு குடி போதையில் பாண்டவர்களுக்காக போரிட்ட சாத்யகி போன்றோருக்கும், கௌரவர்களுக்காக (யாதவ சேனையுடன் போரிட்ட) கிருதவர்மன் முதலானோருக்கும் இடையே வாக்கு வாதம் தொடங்குகிறது. இந்த வாக்குவாதம் முற்றி முடிவில் அந்த கடற்கரையில் வளர்ந்திருந்த கோரைப் புற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அனைவரும் உயிரிழக்கின்றனர். பலராமன் ஒரு வெள்ளைப் பாம்பின் வடிவில் கடலினுள் புகுந்து வைகுண்டம் அடைகிறார். கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்பு கால் துளைக்கப்பட்டு, அதை ஒரு காரணமாக கொண்டு, வைகுண்டம் ஏகுகிறார். பின்னர், துவாரகை கடலால் மூழ்கடிக்கப்படுகிறது. யாதவ வம்சம் இத்துடன் முடிவடைந்ததாக ஸ்ரீமத் பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.













11 comments:

  1. Arumai .vaazhuthukal ungal maaveeran saathyagi

    ReplyDelete
  2. தங்களுடைய பதிவுகளில் இதுவும் மிகவும் நன்றாக உள்ளது. தொடரட்டும் தங்களின் இப்படி.

    ReplyDelete
  3. மஹாபாரதத்தில் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கிறதோ?!!!

    ஒவ்வொன்றாக தெரிய வைத்து வரும் தங்களின் இச்சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

    முதலில், அஸ்வத்தாமன். தற்போது, சாத்யாகி.

    தொடரட்டும் இது போன்ற தனித்துவ விவரங்கள்

    ReplyDelete
  4. மஹாபாரத மஹிமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு நன்றீ

    ReplyDelete
  5. It's very good,thank you for providing the information.

    ReplyDelete
  6. Thanks for sharing this valuable post.

    ReplyDelete
  7. மகாபாரதத்தில் உள்ள அறியாத கதாபாத்திரங்களைப் பற்றி மட்டுல்லாமல் அவார்களைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. You are presenting information about unsung heroes of Mahabharata. Keep it up.

    ReplyDelete
  9. Saatyagi the unknown charachter has been known to me because of your blog thanks for the update keep up your good work
    Bhargavi

    ReplyDelete
  10. Good Evening Sir
    Every Character In The Mahabaratham,Having Some Speciality
    Thanks For Highlighting, Nice To Share
    Keep It Up
    Good Night

    ReplyDelete