Sunday, October 25, 2020

கார்த்திக் மாத தாமோதர பூஜை (31.10.2020 - 30.11.2020)

சாதுர்மாஸ்யத்தின் கடைசி மாதம் ‘கார்த்திக் மாதம்’ எனப்படும். மாதங்களில் மார்கழியாக ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதுபோல் ஸ்ரீமதி ராதாராணி மாதங்களில் 'கார்த்திக் மாதமாக' இருப்பதால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான மாதமும் கூட.

பகவான் நாராயணரின் பன்னிரு திவ்ய நாமங்களில் 12-ஆவது திருநாமமாக வருவது 'தாமோதரா'. (தாம - கயிறு, உதர - வயிறு). மிகவும் பவித்ரமான திருநாமம் இது.

யசோதா மாதா ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் மற்றும் ஸ்ரீமதி ராதாராணியின் மாதமாக கருதப்படுவதால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மனதுக்கு இனிய விரதமாக கொண்டாடப்படுகிறது.


பத்ம புராணமும், ஸ்கந்த புராணமும் இதன் மஹிமை மற்றும் மகத்துவத்தை மிகவும் விஸ்தாரமாக கூறுகிறது. நமது அனைத்து பாவங்களும் விலகும் ஓர் உன்னத விரதமாக கருதப்படுகிறது.

கண்ணன்  என்றதும் அவனின் பால்ய லீலைகளும் விஷமத்தன்மையும் தான் சட்டென்று நினைவிற்கு வரும். கண்ணன் பால்ய லீலைகளில் மிகவும் முக்கியமானது வெண்ணை திருடும் படலம். வெளிப்பார்வைக்கு சாதரணமாக தெரிந்தாலும் இதில் மிகப்பெரிய தத்வம் பொதிந்துள்ளது. அகிலத்தையே ரட்சிக்கும் ஸ்ரீ வத்சனான ஸ்ரீமன் நாராயணனருக்கு கேவலம் வெண்ணை என்பது பெரிய விஷயம் அன்று. ஏன்னென்றால் அவரிடம் சகல ஐஸ்வர்யத்திற்கு அதிபதியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இருக்கும் பொழுது வெண்ணையின் தேவைதான் என்ன? ஏன் அனைத்து கோபியர்கள் இல்லத்தில் வெண்ணை திருடினார்? அனைத்து கோகுல வாசிகளையும் தன்னுடைய க்ருபாகடாக்ஷத்தினால் ரக்ஷிக்கத்தான் ஒவ்வொரு இல்லங்களிலும் வெண்ணை திருடினார். யாருடைய வீட்டிலெல்லாம் வெண்ணை திருடினாரோ அவர்களளெல்லோரும் பூர்வ ஜெனமத்தின் புண்ணிய பலனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதை அறியாத கோபியர்கள், தாய் யசோதா மாதவிடம் தங்கள் இல்லங்களில் வெண்ணையை தங்கள் குமாரன் கண்ணன் திருடுவதாக புகார் அளித்தனர். இதனால் மிகுந்த தர்மசங்கடம் அடைந்த யசோதா மாதா, கண்ணனை அழைத்து அவனின் சேஷ்ட்டைகள் நாளுக்கு நாள் அதிதிகமாவதை கண்டு மனம் பொறுக்காமல், அவனை கயிற்றினால் கட்ட  முற்பட்டபொழுது கயிறு வெறும் இரண்டு அங்குலம் தான் இருந்தது. மேற்கொண்டு பல கயிறுகளை கொண்டு வந்து முடித்து போட்டு கட்ட அதுவும் பற்றாமல் போக யசோதா சோர்ந்து போனாள். அகிலத்தையே தன்னுடைய சிறு ரோம காலின் நுனியில் அடக்கியாள்பவரை கேவலம் இரண்டு அங்குல கயிறு கட்டுப்படுத்துமா என்ன? இருந்தாலும் தாயின் சோர்வு நிலை கண்டு தானே மனமுவந்து தாயின் கயிற்றினால் கட்டுப்பாட்டார் (அ) கட்டுப்படுவது போல் நடித்தார்.

'கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்'

(மதுரகவி ஆழ்வார்)

யசோதா மாதா கயிறை உரலினில் இணைத்து அவன் எங்கும் அசையமுடியாதபடி கட்டினாள். என்னே அதிசயம் அகல கோடி ப்ரஹ்மாண்டகளையும் தாங்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணு தாயின் அன்பு பிடியில் தன்னை கட்டுப்படுத்தினார் என்பதே நிதர்சன உண்மை. ஸ்ரீ மாய கண்ணன் இருப்பு கொள்ளாமல் உரலை இழுத்து கொண்டு இரு மரங்களுக்கு இடயில்சென்று 'நாரத' முனிவரின் சாபத்தினால் ‘மருத மரமாக’ இருந்த 'குபேரனின் புதல்வர்களாக இருந்த 'நள'கூபரர்' மற்றும் 'மணிக்ரீவன்' என்னும் யக்ஷர்களின் சாபநிவர்த்தி செய்து அவர்களை ஆட்கொண்டார் என்ற மற்றொரு உண்மையும் இதில் பொதிந்துள்ளது. மரங்கள் பிளந்த சப்தத்தினால் மிகவும் பயந்த யசோதா மாதா நந்த கோபர், ரோஹிணி உடன் வந்து தன்னையுடைய மகனை மார்போடு அணைத்து தன்னுடைய செயலுக்கு மிகவும் வருந்தினாள். ஸ்ரீ கிருஷ்ணரும் பயப்படுவது போல் நடித்து தாயின்  மார்பில் சாய்ந்தான். என்னே ஒரு மனோஹராமான நிகழ்வு!!! என்னே யசோதா மாதாவின் பாக்கியம்!!! மார்போடு ஸ்ரீ கிருஷ்ணரை அணைத்து சொல்லொண்ணா பரவச நிலையை அடைந்தாள். யசோதா மாதா அடைந்த பரவசத்தை ஸ்ரீ ப்ரஹ்மாவோ, ஸ்ரீ ருத்ர தேவரோ ஏன் ஸ்ரீ மஹாலக்ஷ்மியோ கூட பெற்றததில்லை.

தாமோதர அனுஷ்டிக்கும் முறை

ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்து, குறைந்தபக்ஷம் 1008 முறை அக்ஷ்டாக்ஷர மந்திரம்/ஹரி நாம ஜபம்/ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் ""ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே! ஹரே ராம, ஹரே ராம... ராம, ராம, ஹரே ஹரே''  என்று ஜபித்து, உரலில் ஸ்ரீ கிருஷ்ணரை கட்டிய படத்துடன் வழிபடுவது அதி உத்தமம்.

 

ப்ரஹ்மசர்ய விரதம் அவசியம்.

மீன், மாமிசம், மற்றும் இதர அசைவ பொருட்களை மற்றும் மசூர் பருப்பும் உளுத்தம் பருப்பும் உண்ணக் கூடாது.

துளசி தீர்த்தம் பருகுவது புண்ணியம். நெய் தீபம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு காண்பிப்பது அபார பலன் தரும். ஸ்ரீமதி ராதாராணி நினைத்து ஸ்ரீ கிருஷ்ண ஜபம் புரிவது உத்தமம்.

துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி ஸ்ரீமன் நாராயணனை முறைப்படி பிரார்த்தனை செய்யவும்.

தூய பக்தர்களுக்கு தானம் வழங்குதல் நன்று.

தினமும் சுவையான பதார்த்தங்களைப் படைத்து பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யுங்கள்.

‘ஸ்ரீ நாரத மகரிஷியும்’ மற்றும் ‘ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும்’ இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான விரதம் என்றும் வலியுறுத்தினார்.

ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஒரு ராம நாமத்துக்கு சமம் என்றும், மூன்று ராம நாமம் ஒரு கிருஷ்ண நாமத்துக்கு சமம் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்பட்டு உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.19.6).

கார்த்திக் மாதத்தில் ஸ்ரீமத் பாகவத பாராயணம் மகா கீர்த்தி, தேஜஸ், புண்ணியம் அளிக்கும் குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர் உரலில் கட்டுண்ட படலத்தை படிப்பது அபார பலன் அளிக்கும். 18 புராணங்களையும் படித்த பலன் அன்று ஸ்ரீமத் பாகவத பராயணத்தினால் கிடைக்கும்.

 

ய: படேத் ப்ரயதோ நித்யம்

ஸ்லோகம் பாகவதாம் முனே

அஷ்டதச: புராணானாம்

கார்த்திகே பலம் அப்னுயத்

(ஹரி பக்தி விலாசம் 16.81)  

 



 


 

Saturday, October 10, 2020

திருப்பதி ஸ்ரீநிவாசன் - அபூர்வ ஆன்மீக தகவல்கள்

 

ஸ்ரீமன் நாராயணன்  எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் பரம பவித்ரமான அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீ வேங்கடேச அவதாரம்தான். ஸ்ரீ ராமாவதாரத்திற்கு பிறகு முழு மனித அவதாரம்தான் ஸ்ரீ வேங்கடேச அவதாரம். ஏனென்றால் லோகக்ஷேமத்திற்காக கலியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றி பகவத் சிந்தனையில் நிலைத்திருக்க அவர் குடி கொண்டுள்ள இடம் ஆந்திரா மாவட்டத்தில் உள்ள திருப்பதி. கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் திருமலைவாசன் ஒருவன் தான்.

பாரதத்தில் உள்ள அஷ்ட புண்ணிய ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்களில் திருப்பதியும் ஒன்று.

புரந்தரதாசர் பூலோக வைகுண்டம் என்று "வேங்கடாசல நிலயம் வைகுண்ட புரவாசம்" என்று திருப்பதியை புகழ்கிறார்.

நமது புராணத்தில் எத்துணை இறைவன் இருப்பினும் ஒவ்வொரு இல்லத்திலும் வழி வழியாக குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். பெரும்பாலான குடும்பத்திற்கு திருப்பதி ஏழுமலையான்தான் குலதெய்வமாக இருப்பார். இவ்வளவு ஏன் குலதெய்வம் அறியாதவர்கள் ஸ்ரீ வேங்கடாசலபதியை குலதெய்வமாக வரிப்பர். வேறு எந்த இறைவனுக்கும் இல்லாதே ஒரே தனிச்சிறப்பு இவருக்கு மட்டும்தான்.

"ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ

வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபாணே!

ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணாகத பாரிஜாத

ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம்!!"

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்னும் வழக்கம் உண்டு. எப்பேர்ப்பட்ட நெருக்கடி இருப்பினும், பிரச்னைகளிருப்பினும் ஒருமுறை திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் ஒருவித மனநிறைவு மற்றும் அனைத்து வேண்டுதல்களும் உடனே நிறைவேறும். ஸ்ரீ வேங்கடவனின் ஆகர்ஷ சக்தி வேறு எந்த அர்ச்சாவதார மூர்த்திக்கும் இந்த கலியுகத்தில் இல்லை.

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !!

வ்யாஸர் அருளிய பதினெட்டு புராணங்களில் 12 புராணங்கள் ஸ்ரீநிவாஸனின் மகிமைகளை சொல்லுகின்றன.

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு திருநாமங்களினால் அழைக்கப்படுகிறது. கிருதயுகத்தில் வ்ருஷபாசலம், த்ரேதாயுகத்தில் அஞ்ஜனாசலம், துவாபரயுகத்தில் சேஷாசலம், கலியுகத்தில் வேங்கடாசலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது தவிர கனகாசலம், சிம்ஹாசலம், ஆனந்தகிரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என்று அநேக நாமங்களில் திருப்பதி அழைக்கப்படுகிறது.

வராஹ அவதாரம் முடிந்த பின் ஸ்ரீமன் நாராயணன் திருமலையை தன்னுடைய இருப்பிடமாக தேர்ந்தெடுத்து வசித்து வந்தார். ஆதியில் வராஹர் தங்கியதால் "ஆதி  வராஹ க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படும். நரசிம்ம மூர்த்தியும் தனது அவதார காலம் முடிந்தவுடன் ஏகாந்தமாக தங்கியதும் திருமலைதான். ஆதி வராஹர் தான் முதன் முதலில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க இடம் கொடுத்தவர். அதன் நிமித்தமாய் நாம் இன்றும் முதலில் ஆதி வராஹரை தரிசித்துவிட்டு பிறகு பெருமாளை சேவிக்கின்றோம்.

ப்ரம்மா, அகஸ்தியர், சரஸ்வதி ஆகிய தேவதாமூர்த்திகள் வணங்கி வழிப்பட்ட ஸ்தலம் திருப்பதி. அகத்தியர் சித்தி அடைந்த இடம் திருப்பதி என்றும் கூறுவர்.   

திருப்பதி மலை முழுவதும் சாளக்ராமம்தான். ஆதலால்தான் விசிஷ்டாத்வைதி ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜரும், த்வைத ஆச்சார்யரான ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளும் திருப்பதி வந்த பொழுது பாதத்தால் நடக்காமல் முட்டியால் நடந்து ஸ்ரீ ஏழுமலையானை தரிசித்தனர். இவரது பக்தியை மெச்சி ஸ்ரீனிவாசன் தன்னுடைய விக்கிரஹத்தை ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகளிடம் தந்ததாகவும் இன்றும் அவ்விக்கிரஹம் ஸ்ரீ வாதிராஜர் ஜீவ ப்ருந்தாவனமாகிய சோதே மடத்தில் இன்றும் உள்ளது.

ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் இருப்பினும் அவரின் பிரதான ஏழு தலைகளே ஏழு மலைகளாக திகழ்கின்றன. ஸ்ரீ வேதவ்யாஸர் திருப்பதியில் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளது எனவும் 1008 தீர்த்தங்கள் விசேஷமானவை என்றும் ("ஸத் தர்ம ரதி தான்யதி") குறிப்பாக ஏழு தீர்த்தங்கள் முக்தியாகிய மோக்ஷத்தை அளிக்கும் என்றும் அவையாவன: சுவாமி புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவினாசினி, தும்புரு தீர்த்தம், பாண்டுதீர்த்தம், குமார தாரிகா  மற்றும் க்ருஷ்ண தீர்த்தம்.

வேறு எந்த திருக்கோயிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு திருப்பதி பெருமாளுக்கு உண்டு. அது என்னவென்றால் மூன்று மதாசார்யர்களான ஸ்ரீ ஆதிசங்கரர் (அத்வைதம்), ஸ்ரீ ராமானுஜர் (விசிஷ்டாத்துவைதம்), ஸ்ரீ வ்யாசராஜ தீர்த்தர் (மாத்வம்) வழிபட்ட ஒரே கோயில் திருப்பதி மட்டுமே.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் ஸ்வர்ணாகர்ஷண எந்திரத்தை ஸ்ரீ வேங்கடவனின் பாதத்தின் கீழ் ப்ரதிஷ்டாபனம் செய்ததால்தான் இன்று வரை பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. ஸ்ரீ ராமாநுஜாசார்யார் 

ஸ்ரீ வேங்கடவனிடம் நித்யம் உரையாடும் பெரும்பேறு பெற்றவர். திருமலையின் நித்ய பூஜா அனுஷ்டானங்களை வகுத்தவர். அவரின்  மனதிற்கினிய சீடனாகிய அனந்தாழ்வார் தனது குருவான ஸ்ரீ ராமானுஜருக்கு நித்ய கைங்கர்யம் செய்த புனித தலம் திருப்பதி. அவர் பயன்படுத்திய கடப்பாறையை இன்றும் நாம் கோயில் நுழைவாயிலில் தரிசிக்கலாம். ஸ்ரீ ராகவேந்திரர் தனது முற்பிறவியில் ஸ்ரீ வ்யாஸராய தீர்த்தராக அவதாரம் எடுத்த பொழுது திருப்பதியில் சுமார் 12 ஆண்டுகள் பெருமாளுக்கு பூஜை செய்யும் பெரும் பாக்கியம் பெற்றார். அதன் பயனாய் திம்மண்ண பட்டர் கோபிகாம்பாள் தம்பதிக்கு ஸ்ரீ வேங்கடேசனின் அருளால் கலியுகத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக திரு அவதாரம் புரிந்தார். அதன் காரணமாய் இப்புனித தம்பதியர் அவருக்கு ஸ்ரீ வேங்கடநாதன் என்று நாமம் சூட்டினர்.

 

"தேவெரெந்தரெ திருப்பதி திம்மப்பனு...

குறுகளெந்தரெ மந்த்ராலய ராகப்பனு..."

(எப்படி குரு என்றால் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை குறிக்குமோ அதேபோல் தெய்வம் என்றாலே நமக்கு உடனே நினைவிற்கு வருபவர் ஸ்ரீ வெங்கடாசலபதி.)

வகுளாதேவி ஸ்ரீனிவாசன் வளர்ப்பு தாய். இந்த வகுளாதேவிதான் முன் ஜென்மத்தில் யசோதையாக இருந்து ஸ்ரீ கிருஷ்ணனை வளர்ந்தவள். யசோதையாக இருந்த பொழுது கிருஷ்ணரின் திருமணத்தை நடத்திவைக்கும் பாக்கியம் இல்லாததனால் அடுத்த பிறவியில் வகுளாதேவியாக அவதரித்து கிருஷ்ணரின் மறு அவதாரமான ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடத்திவைத்த பெரும் பாக்கியம் பெற்றவள்.

பிறகு குபேரனிடம் ப்ரம்மா, சிவன், அஸ்வத்த வ்ருக்ஷம் சாக்ஷியாக கடன் வாங்கி பத்மாவதியுடன் திருமணம் நடத்தி வைத்தார். இந்த பத்மாவதிதான் முன் ஜென்மத்தில் வேதவதியாக பிறந்து ஸ்ரீ ராமரை திருமண புரிய ஆவல் கொண்டு, அது முடியாமல் போக, அடுத்த பிறவியில்
 பத்மாவதி என்ற பெயரில் ஆகாச ராஜனுக்கு மகளாக பிறந்து அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக பத்மாவதி தாயாரை மணம் புரிந்து ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்கைக் கலியுகத்தில் காப்பாற்றினார்.

அன்னமய்யா எனும் பாகவதோத்தமர் திருப்பதி பெருமாளின் மீது 30,000க்கும்  மேற்பட்ட கீர்த்தனைகளை பாடியுள்ளார். இது “அன்னமய்யா கீர்த்தனைகள்” என்று மிகவும் புகழ்பெற்றது.

ஹாதீராம் பாவாஜி என்னும் பக்தர் பெருமாளிடம் சொக்கட்டான் விளையாடிய பெரும் பேறு பெற்றவர்..


சந்திரனின் தாக்கம் அதிகமாக உள்ள தலம் திருப்பதி. ஆதலால்தான் இத்தலம் மிகவும் குளிர்ந்த பிரதேசமாகவும், மனதிற்கு சாந்தி அளிக்கும் தலமாகவும், நமது மனம் ஒருமித்த சித்தத்துடன் வேறெதிலும் அலைபாயாமல் இருப்பதற்கு காரணம். நடந்து சென்று திருப்பதி செல்வது நமது உடம்பிற்கும், மனதிற்கும் சிறந்த பயிற்சியாகவும் நமது மூலாதாரத்தின் விழிப்பு நிலையையும் தூண்டுகிறது.

வேங்கடேச மலையில் ஸ்ரீநிவாசனின் சாந்நித்யமும், சகலதேவதா மூர்த்திகளும் புனித மலைகளாகவும், தீர்த்தங்களாகவும், செடி, கொடிகளாகவும், விலங்காகவும் மற்றும் சகல ஜீவராசிகளாகவும் இருந்து பெருமாளை நித்யம் சேவித்து வருவதாக ஐதீகம் ஆதலால்தான் நாம் இங்கு வைக்கும் வேண்டுதலுக்கு அபார பலன் கிடைக்கிறது. நாம் இங்கு எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அவ்வளவு நேரம் நமக்கு இறைவனின் அதிர்வலைகள் நம்முள் செல்வது நமக்கு பரம புண்ணியம்  ஆதலால்தான் அங்கு பலமணி நேரம் தரிசனத்திற்கு இறைவன் நம்மை காக்க வைக்கிறார். இதன் தாத்பர்யம் புரியாமல் நாம்தான் புலம்புகிறோம்.

கோவிந்தராஜன் வகுளாதேவியின் மூத்த புத்திரன் ஆதலால் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிந்தராஜனின் சஹோதரராகிறார்.

சிவராத்திரியன்று பெருமாளுக்கு வைரத்தில் விபூதி பட்டை அணிவித்து ஈஸ்வரனாகவும் காட்சி அளிப்பது விந்தையிலும் விந்தை. இங்கிருக்கும் பெருமாள் சிவ விஷ்ணு ஸ்வரூபமாக இருப்பதால் இது ஒரு தலைசிறந்த சைவ-வைஷ்ணவ தலமாகவும் விளங்குகிறது. ஈஸ்வரனுக்கு உகந்த வில்வம் சாற்றப்படும் ஒரே வைஷ்ணவ திருக்கோயில் திருப்பதி மட்டுமே.

சிலாரோகணம் என்னும் ஒரு அபூர்வ கல்லினால் ஆன திருமேனியுடையவர்.

உலகின் இரண்டாவது பணக்கார கடவுளாக இருப்பினும் அவர் உண்பது என்னவோ மண்சட்டியில் தயிர் சாதம்தான்.

திருப்பதி மலைஅடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்.

பெருமாளின் கருவறை மேலிருப்பது ஆனந்த நிலையம் என்னும் விமானம். இதன் தரிசனம் சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்க வல்லது.

மூலவரின் விக்ரஹத்தில் உள்ள நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் அவர் ஜீவனோடு விளங்குவதற்கு சாட்சியாக உள்ளது. அப்படி ஒரு அபார தேஜஸ் உள்ள மூர்த்தி ஸ்ரீ வேங்கடவன்.

இவருக்கு சாற்றும் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள், நறுமண மலர்கள் வேறெங்கும் கிடைக்காதது.

இங்கு கொங்கணச்சித்தர் சமாதி உள்ளது,

இவருக்கு சாற்றும் ஒற்றை கல் நீலம் என்னும் வைரத்தின் மதிப்பு மட்டும் சுமார் 100 கோடி.

திருப்பதி சொர்க்கவாசல், பிரம்மோத்சவம் மிகவும் விசேஷம்.

திருமலை 3000 அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேசமாகும். இவரின் விக்ரஹம் மட்டும் 110 டிகிரி வெப்பத்தின் அளவிற்கு கீழே குறைவதே இல்லை. இதுவும் ஒரு அதிசயம்.

திருப்பதி அருகிலிருக்கும் திருத்தலங்கள்

திருச்சானூர், ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி கோவில், ஸ்ரீ கபிலேஸ்வரர், ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோயில், ஸ்ரீநிவாசமங்காபுரம், ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வரஸ்வாமி கோயில், ஸ்ரீ காளஹஸ்தி, திருத்தணி.

"ஸ்ரீய : காந்தாய கல்யாண நிதயே
நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய
ஸ்ரீநிவாஸாய மங்களம்"

 

“ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்”!!