மஹாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் முதன்மை கதாபாத்திரமாக விளங்குபவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இதில் எண்ணற்ற கதாபாத்திரங்களும் மற்றும் எண்ணிலடங்கா கிளை கதைகளும் விளங்குகின்றன. பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.!
மஹாபாரத போரின் போது நடுநிவை வகித்தவர்கள்: பலராமன்,
விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி. போர் முடிவில்
கௌரவர் தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின்
மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே
உயிருடன் எஞ்சினர்.
பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர்,
சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன்
எஞ்சினர்.
அப்படிப்பட்ட
மாபெரும் இதிஹாசத்தில் ஒரு மாவீரன் அதுவும் ஒரு சிரஞ்சீவி இருக்கிறான் என்றால்
நம்மால் நம்ப சற்று ஆச்சர்யமாகவும் அதே சமயம் அதிசயமாகவும் இருக்கும். அதை பற்றி சற்று விரிவாக அதே சமயம் இரத்தின
சுருக்கமாகவும் பார்ப்போம்.
1) இந்து
புராணங்களில் கூறியுள்ளபடி சப்த சிரஞ்சீவிகளில் ஒருவன் அஸ்வத்தாமன். மகாபாரதத்தில்
வெல்ல முடியாத வீரர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் ஆனால் மரணமில்லாத வீரர்கள்
யாருமே கிடையாது ஒருவரைத்தவிர, அவர்தான் குரு துரோணரின் ஒரே புதல்வன் அஸ்வத்தாமன்.
மற்ற அறுவர்: அனுமன், விபீஷணன், வியாசர், பரசுராமர், பலி சக்கரவர்த்தி, க்ரிபாச்சார்யர், (மார்க்கண்டேயன்)
அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:
க்ருப பரசுராமஸ்ச சப்தை தே சிரஞ்சீவன:
அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹநுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர் ஆகிய எழுவரும் சிரஞ்சீவிகள்.
(அதிகாலையில் இவர்களின் நாமங்களை உச்சரிப்பது – இந்த ஸ்லோகத்தை சொல்வது – மங்களகரமானது என்பது நம்பிக்கை)
இவர்கள்
எழுவரும் சிவாலய பாதுகாவலர்கள். சிவனையும் பாதுகாப்பவர்கள். நாம் சிவாலய தரிசனம்
முடிந்து ஐந்து நிமிடமாவது கோவிலில் அமர்ந்து திரும்புவோம். அப்போது அந்த எழுவரும்
நம் பாதுகாப்பாக நம் வீடுவரை வருவார்களாம். அதனால் கோவிலுக்குச் சென்று விட்டு
நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.
2) பரசுராமரின்
சீடனும், பரத்வாஜ முனிவரின் புதல்வனுமான துரோணருக்கும் கெளதம மகரிஷியின்
பேத்தியும், முனிவர் ஷரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து
வெகுகாலமாகியும் புத்திர பாக்கியம் இல்லை. அதனால் சிவனை நோக்கி கடும் தவம்
புரிகிறார் துரோணர். அவர் முன் தோன்றும் ஈசன் "உனக்கு என்ன வரம்
வேண்டும்" என்று கேட்க "அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வனாக நீயே எனக்கு
மகனாக பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்கிறார். அவரின் வேண்டுகோளின்படி
மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும்வரை சாகா வரம் பெற்ற மனிதனாக துவாபர
யுகத்தில் தனது ருத்ர அவதாரத்தை எடுக்கிறார் எல்லாம் வல்ல ஈசன். அதன்படி
அஸ்வத்தாமன் உயிருடன் இருக்கும் வரை மனித குலம் அழியாது என்று அமைந்தது.
(அஸ்வத்தாமன் சிரஞ்சீவி அவனுக்கு மரணம் இல்லை, கல்கி அவதாரத்தில் பகவான் வரும்பொழுது அவரை
அவன் சந்திப்பான், அப்பொழுது பூலோகம் நீங்குவான் அத்தோடு மனுகுலம் அழியும் என்பது
இந்துக்களின் நம்பிக்கை, இதிகாசம் சொல்லும் உண்மையும் கூட). இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த
வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசிரியராக
ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது.
3) குதிரையைப்போல்
கனைக்கும் திறன் பெற்றதால் "அஸ்வத்தாமன்" என்று பெயர்
சூட்டப்படுகிறார்.
4) தன்
தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் தனுர் வித்தையும், தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம்
வியூக நுணுக்கங்களையும் கற்றுக்கொள்கிறார். "வில் வித்தையை
முழுவதும் அறிந்தவர்கள் என்று கருதப்படுவது ஏழே ஏழு பேர்தான்
பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன், அர்ஜூனன், கிருஷ்ணர். சக்கரவியூகத்தை உடைக்கும் திறன் பெற்ற மஹாரதி. விஷ்ணு புராணத்தின் படி, அடுத்த வ்யாஸ ரிஷியாக அஸ்வத்தாமன் 29 ஆவது மஹாயுகத்தில் , 7 ஆவது மன்வந்திரத்தில் அவதாரம் எடுக்கிறார் மற்றும் சப்தரிஷி ஆக 8 ஆவது மன்வந்திரத்தில் கிருஷ்ணர், த்வைபாயன வ்யாஸர் மற்றும் பரசுராமருடன் இணைகிறார். 64 கலைகளிலும் 18 வித்தையிலும் கை தேர்ந்தவன்.
5) ஈசனுக்கு
நெற்றிக்கண் போல இவர் நெற்றியில் ஒரு ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உண்டு, அது
இருக்கும் வரை எந்த உயிரினமும் அவரை கொல்லமுடியாது, அதுமட்டுமின்றி தன் தவ
வலிமையால் அதர்வணம் என்ற வேதத்தை உருவாக்கி அந்த வேதத்தின் வித்தகனாக விளங்கினார்.
ருத்ர
அம்சமாக கருதப்படுகிறான். அதனால் மிகப்பெரும் பராக்கிரமசாலியாக விளங்குகிறான். அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே
மூலாதாராமாக அமைந்தது.! வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக
செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.
பாண்டவர்கள்
வனவாசம் இருந்தபோது பகவான் கிருஷ்ணனை பார்க்கச்செல்கிறார் அஸ்வத்தாமன், அவரை வரவேற்ற
கிருஷ்ணன் "என்ன வேண்டும்கேள் குரு மைந்தனே" என்று கேட்க " தங்களுடைய
சுதர்சணச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும்" என்று கேட்கிறார். சிரித்தவாரே
"எடுத்துக்கொள்" என கிருஷ்ணர் சொல்ல, ஆவல் கொண்டு அதை எடுக்கிறார் அஸ்வத்தாமன்
ஆனால் அவரால் அதை அசைக்ககூட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் அதை நகர்த்தக்கூட முடியவில்லை,
அஸ்வத்தாமனின் முயற்ச்சியைக் கண்ட பகவான் "எதற்க்காக உனக்கு இது தேவை நண்பனே"
என்று கேட்க "இன்னும் சிறிது காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர்
நடக்கும், அதில் நான் துரியோதணனை காக்க வேண்டும், பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு
துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும், நீங்கள் இருக்கும்வரை அவர்களை வெல்லமுடியாது
என்பதும் எனக்கு தெரியும் ஆகவே அன்புக் கடவுளே உம்மை வதைக்கவே உமது சுதர்சணம் எனக்கு
வேண்டும்" என்று சொல்ல, மெய்சிலிர்த்து போகிறார் பகவான் பரந்தாமன்.
"உன்
வீரம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா, சுதர்சணம் கொண்டு என்னை கொல்ல இயலாது ஆனால்
போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் கொன்று உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான
நாரயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன். இந்த அஸ்திரத்தை நீ செலுத்திய அடுத்தநொடி
முப்பத்துமுக்கோடி தேவர்களும் உன் பின்னே தோன்றி உனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி நிற்க்கும்
அத்தனை வீரர்களையும் வீழ்த்துவார்கள்" என வரமளிக்கிறார். ஆயினும் இந்த அஸ்திரத்தால்
மனம் திருப்தியடையாத அஸ்வத்தாமன் தன் தவ வலிமையைக்கொண்டும், தன்னால் உருவாக்கப்பட்ட
அதர்வண வேதத்தின் சக்தியைக்கொண்டும் எல்லாம் வல்ல ஈசனையும் சக்தியையும் முதற்கடவுளாக
உருவேற்றி பாசுபதாஸ்த்திரம் என்று சொல்லப்படும் சிவ பானத்தை உலகிலேயே மிகவும் சக்திமிக்க
ஒரு அஸ்திரமாக மாற்றுகிறார்.(பாசுபதாஸ்த்திரம் - எல்லாம் வல்ல பரமேஸ்வரனால் உருவாக்கப்பட்டு
ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் மேகனாதனுக்கும், மகாபாரதத்தில் அர்ஜீனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும்
கொடுக்கப்பட்டது, மற்ற அஸ்திரங்களைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தது, தன்னைவிட பலம் அதிகம்கொண்ட
எதிரியின்மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும், தர்ம வழியில் நடப்பவர்களால் மட்டுமே
இதை எதிரிகள் மீது பயன்படுத்தமுடியும்). எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்க வல்ல பாசுபதாஸ்த்திரம்
கொண்டு பாண்டவர்களை அழிப்பேன் என்று சூளுரைக்கிறார்.
6) பாசுபதாஸ்திரம்
மற்றும் நாராயண அஸ்த்திரத்தை முறையாக கற்றபின் தன் தந்தையிடம்
பிரம்மாஸ்திரத்தையும் கற்றுக்கொள்கிறார். துவாபர யுகத்தில் மும்மூர்த்திகளின் அஸ்திரங்களைப்
பெற்ற ஒரே மாவீரனாக திகழ்கிறார் (ராமாயணத்தில் இராவணனின் மகன் இந்திரஜித்துக்குப்
பிறகு மூன்று அஸ்திரங்களையும் வரமாகப் பெற்றவர் அஸ்வத்தாமன் மட்டுமே).
7) அடுத்த
ஒரு முக்கியமான தகவல் அஸ்வத்தாமன் ஒரு மகாரதி. யுத்தத்தில் படை நடத்துவதிலும், வியூகங்கள்
வகுப்பதிலும், எதிரிகள் மீது தாக்குதல்கள் தொடுப்பதிலும் முன் நிற்கும்
தளகர்த்தர்களை ஐந்து வகைகளில் பிரிக்கலாம்.
- ரதி
- அதிரதி
- மகாரதி
- அதிமகாரதி
- மகாமகாரதி
ரதி
எனப்படுவோர் 5000 படைவீரர்கள் கொண்ட படைகள் மீது போர் தொடுக்கும் வல்லமை
பெற்றவர்கள்.
சகுனி, சிசுபாலன், போன்றோரும்
துரியோதனனின் 90 க்கு மேற்பட்ட தம்பிகளும் ரதி வகையை சேர்ந்த தளகர்த்தர்கள்.
அதிரதி
எனப்படுவோர் 12 ரதிகளுக்கு சமமானவர்கள். அல்லது 60,000 படைவீரர்கள் கொண்ட படைகள்
மீது போர் தொடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.
தர்மர், நகுலன், சகாதேவன், துச்சாதனன்,
ஜெயத்ரதன் மற்றும் துரியோதனன் போன்றோர் அதிரதி வகையை சேர்ந்த பெருமைமிக்க
வீரர்கள்.
மகாரதி 12
அதிரதிகளுக்கு சமானமானவர்கள். 7,20,000 வீரர்கள் கொண்ட படைகளுடன் மோதும் வலிமை
பெற்றவர்கள்.
பீஷ்மர், துரோணர், அர்ஜுனன், கர்ணன், பீமன்... இவர்களுடன் அஸ்வத்தாமனும் மகாரதி வரிசையில் வருபவன்.
அதிமகாரதி 12 மகாரதிகளுக்கு இணையானவர்கள். 86,40,000 வீரர்களுடன் சண்டை போடும் திறன்
மிக்கோர்.
ராமர், கிருஷ்ணர், இந்திரஜித், ஹனுமார்
போன்றோருடன் சிவனின் அவதாரங்களாகிய வீரபத்ரர், பைரவர் ஆகியோரும் அதிமகாரதி
ஆவார்கள்.
இந்த படி
நிலையில் முதன்மையானோர் மகாமகாரதி.
இவர்கள் 12 அதிமகாரதிகளுக்கு இணையாக அல்லது 20,73,60,000 வீரர்களுடன் போர்புரியும்
திறன் பெற்றோர். இவர்களே மகத்தானவர்கள்.
முழுமுதல் தெய்வங்களான பிரம்மா,
விஷ்ணு, சிவன், துர்கா, கணேசர் மற்றும் கார்த்திகேயர் ஆகியோரே மகாமகாரதிகள்.
அவர்களை மிஞ்சி எவருமிலர்.
கீழிருந்து
மேலாக செல்லும் வரிசையில் மூன்றாவது நிலையில் இருந்த மாவீரன் அஸ்வத்தாமன்.
8)
துரியோதனனுக்கு மிகவும் நெருக்கமானவன். அவனின்
பலம் அறிந்தோர் இருவரே ஒருவர் துரோணர், இன்னொருவர் கண்ணன். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப்
போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான
துாது சென்றான். யுத்தம் வந்தால், கௌரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன்
அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என கிருஷ்ண
பரமாத்மாவுக்கு தெரியும். அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான
அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி
வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.
அஸ்தினாபுரத்துக்கு
சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும்
சந்தித்து வணக்கம் தெரிவித்தான். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக
அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான். அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை
நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன்.
கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன்
பேசினான். அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும். அஸ்வத்தமானும்
வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான்
அஸ்வத்தாமன்.
இதை
பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு
ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என,
கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான். இந்த சந்தேகத்தால்,
அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர்
எதிர்பார்த்ததும் அதைத்தான். அஸ்வத்தாமன்
மீது துரியோதனன் பட்ட சந்தேகம் போரில் கவுரவர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனாலே அஸ்வத்தாமனோடு உறவாடி துரியனுக்கு சந்தேகம் ஏற்படுத்தி
அவன் படை தளபதி ஆகாதாவறு தடுத்தான் கண்ணன், தேர்ந்த ராஜதந்திரம் அது.
9) உண்மையில் பாரதபோரின் மிக முக்கிய கட்டமே அஸ்வத்தாமன் வரவில்தான் உண்டு, பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜெயத்ரதன் என எல்லோரும் மடிந்துவிட்ட நிலையில் உண்மையான சண்டையினை தொடக்கினான் அஸ்வத்தாமன். அந்த கட்டமே மிக பிரளயமான கட்டம், வெறிகொண்ட சிம்மமாக அவன் ஆடிய ஆட்டத்தில் பாண்டவ சேனை கலங்கி நின்றது.
9) உண்மையில் பாரதபோரின் மிக முக்கிய கட்டமே அஸ்வத்தாமன் வரவில்தான் உண்டு, பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜெயத்ரதன் என எல்லோரும் மடிந்துவிட்ட நிலையில் உண்மையான சண்டையினை தொடக்கினான் அஸ்வத்தாமன். அந்த கட்டமே மிக பிரளயமான கட்டம், வெறிகொண்ட சிம்மமாக அவன் ஆடிய ஆட்டத்தில் பாண்டவ சேனை கலங்கி நின்றது.
10) 13ம்
நாள் போரில் அபிமன்யுவின் கோர மரணத்திற்கு காரணமான மகாரதிகளில் இவரும் ஒருவர்.
11) பீமனின்
புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அர்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால்,
பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன்,
பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து,
துரியோதனனுக்கு உரமூட்டினான். குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து,
எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். சிகண்டியின் மகன்கள் அனைவரையும் தன்
கரங்களால் வதைக்கிறார்.
12) 15ம்
நாள் போரில் தன் தந்தை துரோணாரை ஏமாற்றி கொலை செய்யும் பாண்டவர்களை அழித்தே
தீருவேன் என்று அஸ்வத்தாமா சத்தியம் செய்கிறார், பாண்டவசேனையின் ஒரு பகுதியை தன்
திவ்ய அஸ்திரங்கள் கொண்டு அழிக்கிறார். 16ம் நாள் போர்க்களத்தில் தன் தந்தையின் மரணத்திற்கு பழிதீர்க்க எண்ணி பகவான் விஷ்ணுவின் நாராயண
அஸ்திரத்தை விண்ணை நோக்கி செலுத்தி பாண்டவ சேனையை அழிக்க உத்தரவு இடுகிறார்.
நாராயண அஸ்திரத்தால் முப்பத்துமுக்கோடி தேவர்களும் விண்ணில் தோன்றி பாண்டவ
சேனைமீது அஸ்திரம் தொடுக்கிறார்கள். 33 கோடி அம்புகள் தங்கள் சேனையை நோக்கி
வருவதைக் கண்டு செய்வதறியாது திகைக்கிறார்கள் பாண்டவர்கள்.
அந்த
ஆயுதம் "நம் அனைவரையும் அழித்துவிடும்" என்று அலறினார் தருமர். கிருஷ்ணர் பாண்டவரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், அந்த
ஆயுதத்தை எதிர்க்காமல் உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுத் தேரிலிருந்து கீழே
இறங்கி அதை வணங்கினால் ஒன்றும் செய்யாது என்றார். பீமனைத் தவிர அனைவரும் அப்படியே
செய்தனர். பீமன் துரோணரின் மகனை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான், தனது கதையை
வேகமாகச் சுழற்றினான், நாராயண ஆயுதம் அவனை சூழ்ந்து கொள்ள அருச்சுனனும், கிருஷ்ணரும் பீமனை
வலுக்கட்டாயமாகத் தேரிலிருந்து கீழே இறக்கி, ஆயுதங்களைக் கீழே போட வைத்து அவனைக்
காப்பாற்றினர். கிருஷ்ணரின் சொல்படி தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தரையில்
மண்டியிட்டு கைகூப்பி வணங்கி உயிர் தானம் வேண்டுகிறார்கள். அம்புமாரி பொழிவதை
நிறுத்திவிட்டு தேவர்கள் மறைகிறார்கள், பாண்டவர்கள் நிம்மதி பெருமூச்சு
விடுகிறார்கள். நாராயணாஸ்திரம்
வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை
ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள்
எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம்.
அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான்
அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார்.
அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என
அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான்
அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை
அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம்.
பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில்
வீழ்ந்தான் துரியோதனன்.
அஸ்வத்தாமா
எழுந்தான். மிச்சமிருக்கும் தன் ஆயுதங்கள் அனைத்தும் சேகரித்தான். அபாண்டவம்
என்னும் தன் அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். மீதம் நடக்க இருப்பவற்றையும்
காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான்.
பதவியேற்ற
அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை.
தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன்
இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில்
ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை
ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு
வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான்
அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான்.
தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால்
கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக்
காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம்
என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும்
அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர்.
கண்ணில்
பட்டவரையெல்லாம் தன் தந்தையின் குருவான பகவான் பரசுராமர் தனக்கு கொடுத்த அற்புத
வாள் கொண்டு சிதைக்கும் அஸ்வத்தாமனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் கிருஷ்ணர்,
பாண்டவர்களையும் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக காட்டிற்குள் செல்கிறார்.
போகும்முன்பு களிமண்ணால் ஒரு பூத உருவத்தை செய்து நான் திரும்பி வரும்வரை இங்கு
நீதான் காவல் காக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
அந்த
எல்லையை கடக்க நினைக்கும் அஸ்வத்தாமனை அந்த பூதம் தடுக்கிறது. அஸ்வத்தாமனின் தனுர்
வித்தைக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும், அதர்வண வேத சக்திகளுக்கும் அந்த பூதம் மசியவேயில்லை.
கடைசியாக தன்னிடம் இருக்கும் சிவனின் அஸ்திரமும், இந்த பூவுலகிலேயே மிகவும்
சக்திவாய்ந்ததும், எப்படிப்பட்ட இலக்கையும் அழிக்கவல்லதும், ஈடு இணையற்றதுமான
பாசுபதாஸ்திரத்தை எடுத்து அந்த பூதத்தின் மீது ஏவுகிறார் அஸ்வத்தாமன். ஆனால் அந்த
பூதமோ பாசுபதாஸ்திரத்தை சோற்றுக்கவளத்தை விழுங்குவதுபோல் விழுங்கிவிட்டு
அஸ்வத்தாமனைப் பார்த்து ஏளனமாக சிரித்தது.
பாசுபதாஸ்திரத்தை
பூதம் தனக்குள் அடக்கியதும் அஸ்வத்தாமன் தன் அஸ்திரங்களையெல்லாம் தியாகம்
செய்கிறார், அந்த உருவத்தின் முன் மண்டியிட்டு "இந்த ஜகத்தில்
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைத்தவிர வேறு எவருக்கும் பாசுபதம்
கட்டுப்படாது, அப்படிபட்ட பாசுபதத்தை கட்டுப்படுத்திய நான்காவது நபரான நீங்கள்
யார் தயவுசெய்து சொல்லுங்கள்?" என்று மனமுருக வேண்ட, தன் சுயரூபம்
காட்டுகிறார் எல்லாம் வல்ல ஈசன். தன் உதிரத்தால் ஈசன் பாதம் நனைத்து தன் பக்தியை
வெளிப்படுத்துகிறார் அஸ்வத்தாமன். கிருஷ்ணரின் வேண்டுகோள்படி பாண்டவ கூடாரத்திற்கு
காவல் நிற்கும் ஈசன் மகிழ்ந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்க
"பாண்டவ கூடாரத்திற்குள் என்னை செல்ல அனுமதியுங்கள்" என்று
வேண்டுகிறார். வரம் தர மறுக்கிறார் ஈசன், உடனே "என்னை உள்ளே செல்ல
அனுமதியுங்கள் இல்லையென்றால் உங்கள் கண்முன்னே என் உயிர் நீப்பேன்" என்று தன்
சிரம் கொய்கிறார் அஸ்வத்தாமன். அவருடைய பிறப்பு ரகசியம் தெரிந்த ஈசன்
(அஸ்வத்தாமனின் மரணம் என்பது மனித இனத்தின் முடிவு), அவர் பக்தியையும்
விடாமுயற்சியையும் பாராட்டி தன் வாளை பரிசளித்துவிட்டு அங்கிருந்து மறைகிறார்.
சிவனின்
வாளுடன் பாண்டவ கூடாரத்திற்குள் நுழையும் அஸ்வத்தாமன் தன் கண்ணில் பட்டதையெல்லாம்
சர்வ நாசம் செய்கிறார். திரவுபதியின் ஐந்து மகன்களையும், சிகண்டி,
திருஷ்டதுய்மணன் மற்றும் ஏனைய வீரர்களையும் கொன்று குவிக்கிறார். குறிப்பாக
திரவுபதியின் மகன்களை உறக்கத்தில் இருக்கும்போதே கொலை செய்கிறார்.
உபபாண்டவர்கள்
(பிரிதிவிந்தியன், சூதசோமா, சுரூதகீர்த்தி, சதானிகா, மற்றும் சுரூதசேனா) என பெயர்
பெற்ற அவர்கள் முன்னொரு காலத்தில் அரிச்சந்திர மகாராஜாவை மிகவும் சோதித்த
விஸ்வாமித்திர முனிவரால் சாபம் பெற்ற குருநில தெய்வங்களாவர். விஸ்வாமித்திரரின் சாபத்தின்படி
மனித பிறப்பெடுத்து உறக்கத்திலேயே அந்த ஈசனின் அம்சம் பெற்ற ஒருவனால் மரணம்
நிகழும் என்பது அவர்கள் விதி. அதன்படி அஸ்வத்தாமனால் மரணம் நிகழ்ந்து மீண்டும்
சொர்க்கம் சென்றனர்.
தன்
தந்தையின் சாவுக்கு காரணமான திருஷ்டதுய்மணனை ஆயுதம் இன்றி வெறும் கைகளாலேயே
அடித்து அவன் சிரசை உடலில் இருந்து பிய்த்து எடுக்கிறார். மொத்த பாண்டவ சேனையையும்
ஒரே ஆளாய் நின்று அழித்து, தீ வைத்து எரிக்கிறார்.
மறுநாள்
காலை வந்து பார்க்கும் பாண்டவர்கள் துடிதுடித்து போகிறார்கள். மகன்கள் இறந்த சேதி
கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம்
தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று,
அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான். கிருஷ்ணனிடம், "18 நாள் போரில் எங்களை
எதுவும் செய்ய முடியாத அஸ்வத்தாமனால் இது எப்படி சாத்தியமாயிற்று" என்று
கேட்ட தர்மனிடம் "அஸ்வத்தாமன் சக்தி அளவிடமுடியாதது, அது யாருக்கும்
தெரியாமல் போனதால்தான் துரியோதணன் தோற்றான், அஸ்வத்தாமன் மட்டும் கெளரவர்களின்
தளபதியாக ஒருநாள் இருந்திருந்தால் தன் அதர்வண வேதத்தின் துணைகொண்டு ஒரேநாளில் போரை
வென்றிருப்பான், அவன் நெற்றியில் உள்ள ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவனிடம் உள்ளவரை அவனை
கொல்வதென்பது நடவாது" என்று சொல்கிறார் கிருஷ்ணர்.
13) ஆற்றங்கரையோரம்
தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்துகொண்டிருக்கும் அஸ்வத்தாமனை அழிக்க திட்டம்
போடுகிறார்கள் பாண்டவர்கள், பிரம்மாஸ்திரம் தவிர வேறு எந்த அஸ்திரம் கொண்டும் அவரை
சாய்க்க முடியாது என்று கிருஷ்ணர் மூலம் தெரிந்து கொள்ளும் அர்ஜுனன் அவரை நோக்கி
பிரம்மாஸ்த்திரத்தை செலுத்த, தன் தவ வலிமையால் இதை உணர்ந்து கொள்ளும் அஸ்வத்தாமன்
தன் கையில் உள்ள தர்ப்பை புல்லை வேத சக்திகொண்டு பிரம்மாஸ்திரமாக மாற்றி
அர்ஜுனனின் அஸ்திரத்துக்கு எதிராக எய்கிறார். இரு பிரம்மாஸ்திரங்களும் ஒன்றோடு
ஒன்று மோத வானில் தீப்பிழம்பு தோன்றி அனைத்து உயிர்களும் அஞ்சி நடுங்கின.
ஒரே
நேரத்தில் இரு பிரம்மாஸ்திரங்கள் மோதிக் கொண்டால் பூமி அழிவைச் சந்திக்கும் என்பதை
உணர்ந்த வேத வியாசர் தன் ஞான சக்தியின் மூலம் இரு பிரம்மாஸ்திரங்களையும் தடுக்கிறார்.
அர்ஜீனனையும் அஸ்வத்தாமனையும் பிரம்மாஸ்திரங்களை திரும்பப்பெறச் சொல்கிறார்.
அர்ஜூனன் பிரம்மாஸ்திரத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள, அஸ்வந்தாமனோ மறுக்கிறார்.
உயிர்களின் நலன் கருதி யாராவது ஒரு உயிரை தானமாக தர முன் வருகிறான் தருமன்,
ஆகையால், அஸ்வத்தாமனோ அபிமன்யுவின் மனைவி உத்திரையின் கருவை நோக்கி செலுத்துகிறார்.
அவள் கருவை அழித்து உறைவிடம் செல்கிறது பிரம்மாஸ்திரம். காவியங்களில் முதல்
கருவறுத்தல் என்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டவர் அஸ்வத்தாமன். உத்தரையின்
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பகவான் கிருஷ்ணர், காத்தார்;
பரீக்ஷித்து
உதயமாவதற்கு உதவினார். அத்தோடு பாண்டவர் மற்றும் பாஞ்சால தேசத்தின் அனைத்து
வாரிசுகளும் அழிந்து போகிறார்கள். அஸ்வத்தாமனின் செயல் கண்டு வெகுண்டு எழுகிறார்
ஸ்ரீகிருஷ்ணர், அஸ்வத்தாமனை அழிக்க தன் சுதர்சண சக்கரத்தை ஏவுகிறார், ஆனால்
அஸ்வத்தாமன் நெற்றியில் இருக்கும் ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவரை காப்பாற்றுகிறது. அவருடைய
ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணியை) பறிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
14) மகா
பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்லப்படுவதில்லை. மாறாக அவன் சிகை நீக்கப்படுகிறது.
கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல்
பெரிய தண்டனையாக கருதப்படுகிறது. அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது.
அஸ்வத்தாமனை இப்படி செய்துவிடுகிறார்கள். அஸ்வத்தாமனுக்கு இந்த சாகாவரம் அவனின்
நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான்.
இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின்
ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில்
இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத
இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும்
காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு
செய்தார்.
"கருவில்
இருக்கும் குழந்தையைகூட கொன்ற மகாபாதகனான நீ பூமி அழியும்வரை உயிரோடு இருந்தாலும்
உனக்கு உறவென்று யாரும் இருக்கமாட்டார்கள், உன் ரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உன்னிடம் இல்லாததால்
இனி உன்னை எந்த நோயும் தீண்டும், உன் முன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும்
நிற்காமல் வடியும், உனக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ எதுவும் இருக்காது, மனித
நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக்கூடாது" என்று சாபம் இடுகிறார்
ஸ்ரீகிருஷ்ணர். உடனே "பகவானே, நான் செய்தது குற்றமென்றால் நீங்களும்
பாண்டவர்களும் செய்தது எந்த விதத்திலும் தர்மம் இல்லை, நீங்கள் இட்ட சாபம் என்னை
கேட்குமாயேன் அதன் முழுகாரணகர்த்தா தாங்களே, அதனால் என் தேகத்தில் இருந்து வடியும்
உதிரத்தை காலம் உள்ளவரை அருந்திக் குடிக்கும் புழுவாக தாங்கள் ஜனனம்
எடுக்கவேண்டும்" என்று சாபம் தருகிறார். கடவுளால் சாபம் பெற்ற ஒரே மனிதனும்,
கடவுளுக்கே சாபம் தந்த ஒரே மனிதனும் அஸ்வத்தாமனே.
15) தருமன்
அஸ்தினாபுர அரியணை ஏறியதும் காட்டுக்குள் சென்று வேத வியாசரின் ஆசிரமத்தில்
சேர்ந்து வேதங்களை போதிக்கிறார் அஸ்வத்தாமன். மனவந்திரங்களையும், அதர்வண
வேதத்தையும் திருத்தி எழுதுகிறார். வியாசரின் அறிவுரைப்படி அன்னை யோகமாயாவை நோக்கி
தவம் புரிந்து ஸ்ரீகிருஷ்ணரின் சாபத்தில் இருந்து விடுபடுகிறார்."துவாபர
யுகம் முடிந்து கலி யுகத்தில் கி. பி 4044ம் வருடம் நான் கல்கி அவதாரம் எடுக்கும்
சமயத்தில் நீயும் நானும் சந்திப்போம், அப்போதுதான் உனக்கு முக்தி கிடைக்கும்,
அதுவே மனித குலத்தின் அழிவும் ஆகும், அதுவரை மனித இனத்திற்காக நீ
வாழவேண்டும்" என்று வரமளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
16) 36
ஆண்டுகள் கழித்து பரிக்ஷித்து மகாராஜன் அரியணை ஏற்றதும் தம் வாழ்நாளை முடித்துக்
கொள்ள இமயம் புறப்பட்ட பாண்டவர்கள் அஸ்வத்தாமனை கடைசியாக கண்டதாகவும், அதன் பிறகு
அவர் மனித சமுதாயத்தின் கண்ணில் படவில்லை என்றும் புராணங்கள் சொல்கின்றன.
17) இன்றும்
குஜராத் மாநிலத்தின் ஆசிர்கார் மாவட்டத்தில் உள்ள மலைக்காடுகளில் அவர் சுற்றி
வருவதாகவும், பலர் அவரை நேரில் கண்டதாகவும் வதந்திகள் உண்டு. அவர் நெற்றியில்
பெரிய காயமும் அதில் இருந்து உதிரம் வடிந்துகொண்டே இருக்கும் என்றும், அவர் சுமார்
10 அடி உயரம் இருப்பார் என்றும் மக்களிடையே ஒரு பேச்சு. ஆனால் அது எந்த அளவு உண்மை
என்று தெரியவில்லை. அந்த மலையில் உள்ள மிகப்பழமையான சிவன் கோவிலுக்கு தினமும்
அதிகாலையில் வந்து அவர் பூஜித்து செல்வதாகவும், அந்த சுற்றுவட்டார பகுதிகளில்
கிடைக்காத மலர்களும், இமயத்தின் சாரல்களில் மட்டுமே வளரும் அதிசயமான மலர்களைக்
கொண்டு அர்ச்சணை செய்வதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து
வருகிறது. இமயமலை அடிவாரத்தில்
சில பழங்குடியினருடன் அஸ்வத்தாமா நடந்தும் வாழ்ந்தும் வருவதை சிலர் கண்டுள்ளதாகவும்
கூறுகின்றனர்
18) இந்த
கட்டுக்கதைகள் உண்மையோ பொய்யோ அது நமக்கு தேவையில்லை, சரித்திரம் போற்றும் ஒரு
சிரஞ்சீவி வாழ்ந்திருக்கிறார், அவரை கொல்ல யாராலும் முடியாது, அனைத்து அஸ்திர
சாஸ்திரமும் தெரிந்த ஒரே துவாபர யுகத்தின் நாயகன், போன யுகத்திற்கும் இந்த
யுகத்திற்கும் பாலமாக இருக்கும் கடைசி மானிடன். சிவ தொண்டில் தலைசிறந்த பக்தன்,
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமான பிரம்மாஸ்திரம்,
நாராயணாஸ்த்திரம், பாசுபாதஸ்த்திரம் தெரிந்த ஒரே மாவீரன், மனித குலம் வாழவேண்டும்
என்று தன் சாவை தினந்தினம் தள்ளி வைக்கும் தயாளன் அஸ்வத்தாமன் புகழ் என்றும்
நிலைத்திருக்கும்.
19)
‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின்
அம்சம்’ என்று கூறுவார்கள்.
“ஓம் ஸ்திராபுஷ்மன்தாய வித்மஹே
த்ரோண புத்ராய தீமஹி
தந்நோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்”
நோய் தீர்க்கும் சிரஞ்சீவி
மந்திரம்...
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ...
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ...
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ...
ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி
நமஹ...
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ...
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ...
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ...
வலது
கையில் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஓன்றிரண்டு அருகம்புல் போட்டு,
வடக்கு நோக்கி அமர்ந்தோ, நின்றோ சிரஞ்சீவிகளான இந்த ஏழுவரின் நாமங்களையும் 21 தடவை
ஜெபித்து, பின்னர் அந்த நீரை அருந்தி வர தீரா நோய்கள் தீருவதுடன் அகால மரணம்
ஏற்படாமல் காக்கும்.
முடியாதவர்கள்
எழுந்த உடனும் உறங்கும் முன்னரும் மூன்று முறையாவது ஜபித்து வர மேற்கண்ட பலனில்
பாதி கிட்டும்.