சப்த ரிஷிகளில் மிக ச்ரேஷ்டரான அத்ரி மகரிஷிக்கும் பதிவ்ரதா சிரோன்மணியான அனுஸுயா மாதாவிற்கு மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்தவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். அத்ரி - அனுசுயா ஸத்புத்ரனை வேண்டி தவமிருக்க, அவரின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் "நானே என்னை கொடுக்கிறேன்' என்ற வாக்கியத்தின்படி 'தத்தாத்ரேயராக' அவதரித்தார். எப்படி அதிதி-கஸ்யபர் தம்பதியருக்கு வாமனராய், கர்தமர்-தேவஹூதி தம்பதியருக்கு ஸ்ரீ கபிலராய் தோன்றி அனுகிரஹித்தாரோ அதேபோல் அத்ரி - அனுசுயா தமபதிக்கு மும் மூர்த்திகளின் அம்சமாய் ஸ்ரீ தத்தாத்ரேயராய் தோன்றி அனுகிரஹித்தார்.
மார்கதரிசனம் குரு க்ருபையின்றி கிடைப்பதில்லை. குரு தத்தாத்ரேயர் ஒருவர்தான் மார்கதரிசனம் செய்விப்பவர். ஆகையினால் இவரது பிறப்பு மார்கழி (மார்க்க சீர்ஷ ) மாதத்தில் உண்டாயிற்று.
குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.
ப்ரஹ்மதேவனின் அம்சமான சந்திரன், விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேயன், சிவனின் அம்சமான துர்வாசன் என்று தங்களின் மூன்று அம்ச சக்திகளை அனுசூயாவிடம் அளித்தனர். இவர்களில் சந்திரனும், துர்வாசரும் தாயை நமஸ்கரித்து தவத்திற்கு செல்ல அனுமதி கோரினர். துர்வாசர் ரிஷி ஆனதால் தீர்த்த யாத்திரை செய்து தவம் செய்யவும், சந்திரன் தன்னுடைய லோகம் சென்று தன் தாயின் பாதங்களை தரிசித்து கொண்டிருக்கவும் விடை பெற்று சென்றனர். மூன்றாவது புத்திரன் விஷ்ணு மூர்த்தியான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவர்களுடன் தங்கினார். "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" என்ற வாக்கின்படி மூன்றுபேரும் சேர்ந்த தத்த மூர்த்தி குரு பீடத்திற்கு மூல புருஷராக விளங்கினார்.
குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.
தத்தாத்ரேய வழிபாடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மிக மிக அதிகம். அதற்குக் காரணம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே.
ஸ்ரீமன் நாராயணனின் 24 ரூபங்களில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.
இவர் ஒரு அவதூதர். ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் (1.3.11) ஸ்ரீ தத்த அவதாரம் என்று பாகவதம் குறிப்பிடுகிறது. ஸ்ரீ விஷ்ணு குருவாகி அருள் புரிந்த ஓர் உன்னத அவதாரம் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதாரம்.
த்ரிபுரா ரஹஸ்யம், அவதூத கீதை, தர்சனோபநிஷத், அவதூதோபநிஷத் இவரை பற்றி மிக விரிவாக விளக்குகின்றது. மார்க்கண்டேய புராணமும், ஸ்ரீ மத் பாகவதமும் இவரின் மகிமைகளை எடுத்தியம்புகிறது. ஸ்ரீ மத் பாகவதத்தில் (11-7,8,9) யயாதியின் புதல்வரான யதுவிற்கும் ஓர் அவதூதர்க்கும் (ஸ்ரீ தத்தர்) நடக்கும் சம்பாஷணைகள் 'யது வாத சம்வாதம்' என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ தத்தர் நித்யம் ஸந்நிஹிதோ ஹரி: என்ற கூற்றுக்கிணங்க அருகில் இருந்து காட்சி தந்து அனுகிரஹிப்பவர். ஆனால் நம்மால் அவரின் மாயையை புரிந்து கொண்டு அவரின் முழு கடாக்ஷத்தை பெறுவது மிகவும் கடினம்.
நித்ய சிரஞ்சீவி.
தத்தரின் பாத தூளியிலிருந்து யதுவும், கார்த்தவீர்யார்ஜுனனும் தோன்றினார்.
ஸ்ரீ தத்தரின் தோற்றம்
அவதூதர். கௌபீனம் அணிந்து சாம்பலை உடலில் பூசி கொண்டு ஏகாந்த ஸ்வரூபியாக, முற்றிலும் பற்றற்றவர். எப்பொழுது எங்கு இருப்பார் எங்கு செல்வார் என்று அனைவராலும் அறியப்பட முடிய யோக மாயா ஸ்வரூபி ஸ்ரீ தத்தாத்ரேயர். பசு, நான்கு நாய்கள் புடைசூழ, கரங்களில் திரிசூலம், சங்கு சக்கர ஸ்வரூபியாய், சாம்பல் பூசிய தேகத்துடன், பிட்சை பாத்திரம் ஏந்தி, ஜெபமாலையுடன் அபார தேஜஸுடன் வீற்றிற்றுப்பார்.
பசு/காமதேனு - கேட்பவற்றை அள்ளித்தரும் காமதேனுவை பக்தர்களின் மனோபீஷ்டங்களை பூர்த்தி செய்பவர். தர்ம ரூபம்.
நான்கு நாய்கள் - நான்கு வேதங்களை குறிக்கும்.
திரிசூலம் - அறியாமை, அகந்தையை அழிப்பதை குறிக்கும்.
சுதர்சன சக்கரம் - முக்காலமும் அறிந்தவர். ஆதியும் அந்தமும் இல்லாத விஷ்ணு ஸ்வரூபம் என்பதை உணர்த்தும்.
சங்கு - உறங்கும் ஆத்மாவை பிரணவ ஒலியாகிய ஓம்காரதத்துடன் தட்டி எழுப்பும்.
சாம்பல் - செல்வம், ஆடம்பரம், அகந்தை, புகழ், ஆணவம் அனைத்தும் ஒருநாள் அழியும் நிலையற்ற தன்மையுடையவை என்பதை உணர்த்தும்.
பிட்சை பாத்திரம் - தனக்கென்று ஏதும் சேர்க்காமல் இருப்பதை பகிர்ந்துண்டு உண்ண வேண்டும் என்பதை உணர்த்தும்.
ஜெபமாலை - நித்யம் பகவானின் நாம ஜெபத்தில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்த்தும்.
ஸ்ரீ தத்தர் கலியுகத்தில் எடுத்த அவதாரங்கள் ஐந்து:
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர்
ஸ்ரீ நரசிம்ஹ ஸரஸ்வதி
ஸ்ரீ சுவாமி சமர்த்தர் (எ) அக்கல்கோட் மஹராஜ்
ஸ்ரீ மாணிக் பிரபு மஹராஜ்
ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா
'டேம்பே ஸ்வாமி' என்று அழைக்கப்படும் 'ஸ்ரீ வாசுதேவானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்' 3500 ஸ்லோகங்கள் மற்றும் 64 அத்தியாயங்கள் கொண்ட ஸ்ரீ தத்த புராணம் படைத்தார்.
2000 ஸ்லோகங்கள் அடங்கிய 'குரு சரித்திரம்' என்னும் நூலும் இவரின் முதல் இரண்டு அவதாரங்களான 'ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர்' மற்றும் 'ஸ்ரீ நரசிம்ஹ ஸரஸ்வதி' மகிமைகளை பற்றி விரிவாக பேசுகிறது.
ஸ்ரீ தத்தர் தனது யோகா மாயையால் 15 தத்வங்களாலான உலகை படைத்து தான் 16ஆவது தத்வமான புருஷனாக ஆனார்.
இவரின் லீலா விநோதங்களை அறிந்து கொள்வது மிக மிக கடினம் ஏனென்றால் முற்றிலும் மாய தோற்றத்துடன் வெவ்வேறு ரூபங்களில் தனது உண்மையான ஸ்வரூபத்தை மறைத்து மாய வடிவத்துடன் விளங்கும் குரு. பூர்வ ஜென்ம புண்ணிய குவியல் இருந்தால்தான் இவரை வழிபடும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
ஏகநாதர், ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள், தத்தோத்பவா, அலர்கன், விஷ்ணு தத்தர், சத்ருஜித் மற்றும் பல பாகவதோத்தமர்கள் இவரின் தரிசனம் பெற்றனர்.
ஸ்ரீ தத்தரின் 24 குரு மார்கள் :
பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், வீட்டில் பூச்சி, தேனீ, யானை, தும்பி, மான், மீன், பிங்கலை என்னும் வேசி, அன்னப்பறவை, பாலகன், குமாரி, வேடன், சர்ப்பம், சிலந்திப்பூச்சி, ஈ.
சீடர்கள்
இவர் ஸ்ரீ பரசுராமரின் தந்தை ஜமதக்னியின் குரு. இவர்தான் ஸ்ரீ பரசுராமருக்கு சாக்த வழிபாட்டின் தத்துவத்தை உபதேசித்த குரு என்று திரிபுர ரஹஸ்யத்தின் 'மஹாத்ம்ய-ஜ்ஞான கண்டங்கள் விளக்குகின்றன. இதன் அடிப்படையில் பரசுராமர் கல்ப சூத்திரங்களை தொகுத்து ஸ்ரீ வித்யா பூஜைக்கான முதல் விளக்க நூலை படைத்தார்.
ஆறாவது சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் தோன்றிய ப்ரஹ்லாதருக்கு குருவாக இருந்து ‘ஆத்ம தத்வத்தை’ உபதேசித்தார்.
க்ருத வீர்யனின் புதல்வனான 27 ஆவது சதுர்யுகத்தில் தோன்றிய கார்த்தவீர்யார்ஜுனனுக்கு ‘அஷ்டாங்க யோகத்தை’ உபதேசித்தார்.
இவரின் அனுகிரஹத்தால்தான் ஸ்ரீஆதிசங்கரர் கைலாசத்தில் இருந்து யோகமார்க்கத்தில் சென்று ஈசனிடம் பஞ்ச லிங்ககளைப்பெற்று 'சௌந்தர்ய லஹரி' பெற்றார் என 'ஸ்ரீ சங்கர விஜயம்' கூறுகிறது.
ஸ்ரீ தத்தர் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஸ்தலங்கள்:
அத்ரி அனுசுயா குடில், மாஹூர க்ஷேத்ரம், கரவீர க்ஷேத்ரம், ந்ருசிம்ஹவாடீ, ஒளதும்பர க்ஷேத்ரம், பீட்டாபுரம், அக்கல்கோட், கானகாபூர், மாணிக் நகர், காரஞ்சா, குருவபுரம், நாசிக், பட்காம்வ், சேந்தமங்கலம், ஸ்கந்தகிரி, சேங்காலிபுரம், கணபதி சச்சிதானந்த தத்த பீடம் மற்றும் பல.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய (அத்ரி புத்ராய) தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||
ஸ்ரீ தத்தாத்ரேயரைத் தரிசிக்க :-
யதுகுலோ வனிகம் வௌஷட் ||
இந்த மந்திரத்தை இரவில் படுக்கையில் அமர்ந்தபடியே ஜபித்து வர ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்கலாம்.
சந்தானபாக்கிய_ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:
தூரிக்ருத பிஸாச்சார்த்தி ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|
யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||
இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குருஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் பாக்கியம் கிட்டும்.
ஸ்ரீ தத்தரின் அவதார கதைகள் கேட்பவரையும், சொல்பவரையும் பாவங்களிலிருந்து மீட்டு, பற்றற்ற பரம நிலையை அளித்து முடிவில் மோக்ஷ சாதனையை அளிக்கும் வல்லமை கொண்டது.